நீட்  விவகாரத்தில் ஸ்டாலின் வெற்றியோடு திரும்புவார்.! சொன்னது திமுக அமைச்சர் அல்ல, முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு.! 

நீட்  விவகாரத்தில் ஸ்டாலின் வெற்றியோடு திரும்புவார்.! சொன்னது திமுக அமைச்சர் அல்ல, முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு.! 

நீட் மற்றும் 7 தமிழர் விடுதலை தொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெற்றியுடன் திரும்புவார் என நம்புவதாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கூறியுள்ளார். 

மதுரையில் நடைபெற்று வரும் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளை விரைவாக முடிக்க கோரி முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ மதுரை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயனிடம் அதிமுக கட்சியினருடன் வந்து கோரிக்கை மனு அளித்தார் 

அதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறும்போது, "மதுரை மாநகராட்சி பகுதியில் நடைபெற்று வரும் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளை விரைந்து முடிக்க ஆணையரிடம் மனு அளித்து இருக்கின்றேன்.மேலும் பணி முடிக்கப்பட்ட திட்டங்களை விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டுவர கோரிக்கை வைத்திருக்கிறேன் எனக் கூறினார். 

மேலும் "நாங்கள் பெற்ற பிள்ளைக்கு  அவர்கள் பெயர் வைப்பது போன்ற நாங்கள் கொண்டு வந்த திட்டங்களுக்கு ( திமுக ) அவர்கள் பெயர் சூட்டி இருக்கிறார்கள். எப்படியாக இருந்தாலும் பொது மக்களுக்கு பயன் கிடைத்தால் நல்லது தான்" என்ற அவர் "வடிவேல் காமெடி போல மதுக்கடை தொடர்பான முதலமைச்சரின் பேச்சு நகைச்சுவையாக இருக்கிறது. எதிர்கட்சி தலைவராக இருந்த போது டாஸ்மாக் திறப்பிற்கு எதிராக பேசியவர் , தற்போது ஆதரவாக பேசுகின்றார். திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது திமுக ஆட்சிக்கு வந்தால் திமுகவினர் நடத்தும் மது ஆலைகள் மூடப்படும் என கூறினார். அதனை தற்போது அவர்கள் செய்வார்களா?" எனக் கேள்வி எழுப்பினார். 

தொடர்ந்து பேசிய அவர் " முதல்வர் ஸ்டாலின் சந்தோசமாக டெல்லி செல்கிறார், நீட் தேர்வை ரத்து செய்து 7 தமிழர் விடுதலையை உறுதி செய்து வெற்றி உடன் திரும்பி வருவார் என்று நம்புகிறேன்" எனக் கூறிய அவர், சசிகலாவை பற்றி கேட்ட கேள்விக்கு "தமிழகத்திற்கு தேவையான நல்ல விஷயங்களை பேசுங்கள்" என்று கூறினார்.