ராமேஸ்வரம்: ஒரு படகிற்கு 30 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை நஷ்டம்; கவலையில் மீனவர்கள்!

ராமேஸ்வரம்: ஒரு படகிற்கு 30 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை நஷ்டம்; கவலையில் மீனவர்கள்!

ராமேஸ்வரம்: மீன்பிடி தடை காலம் முடிந்து கடலுக்கு மீன் பிடிக்க சென்ற மீனவர்களுக்கு மீன்வரத்து குறைந்துள்ளதால் மீனவர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர்.

ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில்  இருந்து சுமார் 600க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் கடலுக்குச் சென்று, மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். 

இந்த நிலையில் மீன்பிடி தடைக்காலம் 61 நாட்களுக்கு கழித்து நேற்று முன்தினம் மீனவர்கள் கடலுக்குள் செல்வதாக இருந்தனர். மீன்வளத்துறை அதிகாரிகள் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் காரணத்தினால் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தினர். ஆனால்,  மீன்வளத்துறை அதிகாரிகளின் அறிவுறுத்தலை மீறி மீன்பிடிப்பதற்கான அனுமதி சீட்டும் பெறாமல் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர்.

இந்த நிலையில் நடுக்கடலில் காற்றின் வேகம் நான்கு திசையிலும் மாறி மாறி அடித்ததின் காரணமாக மீன் வரத்து குறைவாக கிடைத்துள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் ஒரு விசைப்படகிற்கு 30 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதால் மீனவர்கள் மிகுந்த கவலை அடைந்துள்ளனர். 

மேலும் தாங்கள் பிடித்து வரும் மீன்களுக்கு உரிய விலை கொடுக்காமல், குறைந்த விலைக்கு முதலாளிகள் வாங்கி செல்வதினால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இதையும் படிக்க: அரிக்கொம்பன் யானைக்கு சிலை வைத்த விவசாயி!