அரசின் நடவடிக்கையால் 34,800 என்ற அளவிற்கு கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது.! -மா. சுப்பிரமணியன் பேச்சு.! 

அரசின் நடவடிக்கையால் 34,800 என்ற அளவிற்கு கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது.! -மா. சுப்பிரமணியன் பேச்சு.! 

தமிழகத்தில் அரசு எடுத்த துரித நடவடிக்கை காரணமாக கொரோனா பாதிப்பு  36 ஆயிரத்திலிருந்து தற்போது 34 ஆயிரத்து 800 என்ற அளவிற்கு குறைந்துள்ளது என மருத்துவம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் தடுப்பூசி முகாம்களில் ஆய்வு மேற்கொள்வதற்காக தமிழக மருத்துவம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று காலை தூத்துக்குடி வந்தார். அப்போது மேலக்கூட்டுடன்காடு பகுதியில் உள்ள கொரோனா‌ பரவல் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியை நேரில் ஆய்வு செய்தார்.

இதற்கு முன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர், தேனி ஆகிய மாவட்டங்களில் கொரோனா சிகிச்சைக்காக செய்யப்படுள்ள மருத்துவ கட்டமைப்பு மற்றும் தடுப்பூசி போடும் நடவடிக்கைகளை ஆய்வு செய்ய உள்ளோம் எனக் கூறினார். 

மேலும், தமிழகத்தில் அரசு எடுத்த துரித நடவடிக்கை காரணமாக கொரோனா பாதிப்பு  36 ஆயிரத்திலிருந்து தற்போது 34 ஆயிரத்து 800 என்ற அளவிற்கு குறைந்துள்ளது எனக் கூறிய அவர் தமிழகத்தில் சமீபத்தில் 80 லட்சம் தடுப்பூசிகள் வந்துள்ளது என்றும், இதுவரை 70 லட்சம் தடுப்பூசிகள்  போடப்பட்டுள்ளது என்றும், 18 வயது முதல் 44 வயதில் உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடுவதற்காக 46 கோடி ரூபாய் செலவில் 12 லட்சம் தடுப்பூசிகள் வரவழைக்கப்பட்டுள்ளது எனக் கூறினார். மேலும் தமிழகத்தில் தடுப்பூசி போடாதவர்களே இல்லை என்ற நிலையை உருவாக்குவதற்காக 3.5 கோடி தடுப்பூசிகள் வாங்குவதற்காக உலகளாவிய ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது எனக் கூறியுள்ளார். 

தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்தில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு மருத்துவ ஆக்சிஜனுக்கு இக்கட்டான சூழல் இருந்தது. ஆனால் தமிழக சுகாதாரத் துறை, தொழில்துறை, மின்சார வாரியத் துறைகளின்  முயற்சியால் ஜாம்ஷெட்பூர், ரூர்கேலா போன்ற பகுதிகளிலிருந்து ஆக்ஸிஜன் கொண்டுவரப்பட்டு தற்போது மருத்துவ ஆக்சிஜன் தேவை முழுமையாக  நிறைவேற்றப்பட்டுள்ளது. இனியடுத்து, கொரோனா 3-வது அலை ஏற்பட்டாலும் அதனை சமாளிக்க கூடிய அளவிற்கு பல்வேறு பகுதிகளிலும் ஆக்சிஜன் உற்பத்தி  உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது எனக் கூறினார்.

அதோடு நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கருப்பு பூஞ்சை நோய்  தொற்று ஏற்படுவதாக சொல்லப்படுகிறது. ஆனால் கொரோனா பாதிப்பிலுள்ளவர்களுக்கும் கருப்பு பூஞ்சை பாதிப்பு ஏற்படுவது குறித்து ஆய்வு செய்ய பல்துறை அலுவலர்கள் அடங்கிய 10-க்கும் மேற்பட்டவர்கள் அடங்கிய நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது. "ஸ்டீராய்டு" கொடுப்பதனாலும்,  அசுத்தமான தண்ணீரிலிருந்து ஆக்ஸிஜன் உற்பத்தி செய்து அதை மூச்சாக உள்ளிழுப்பதன் மூலமாகவும் கருப்பு பூஞ்சை தொற்று ஏற்படுவதாக தெரிவிக்கிறார்கள். இது குறித்து ஆலோசனைக்கூட்டம் நடத்தப்பட்டு வல்லுனர்கள் குழு  இரண்டு நாட்களில் ஆராய்ச்சியை தொடங்கும் எனத்  தெரிவித்தார். மேலும் கொரோனா உயிரிழப்பு குறித்த உண்மையை சொன்னால் தான் பயமும், விழிப்புணர்வும் வரும். எனவே கரோனா தொற்று உயிரிழப்புகளின் எந்த ஒளிவு மறைவும் இல்லை எனக் கூறினார். 

இந்நிகழ்வுகளின் போது, தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதாஜீவன், தமிழக மீன்வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ஆர் ராதாகிருஷ்ணன், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில்ராஜ் உள்ளிட்டவர்கள் உடன் இருந்தனர்.