இன்னைக்கு ஒரு புடி; எல்லாரும் வாங்க!

இன்னைக்கு ஒரு புடி; எல்லாரும் வாங்க!

மதுரை: மதுரையில் சமூக நல்லிணக்கத்தை எடுத்துரைக்கும் வகையில் ஆண்கள் மட்டுமே கலந்துகொண்ட பிரமாண்ட அசைவ திருவிழா நடைபெற்றது

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகேயுள்ள சொரிக்காம்பட்டி பெருமாள்கோவில்பட்டி கிராமத்தில் உள்ள கரும்பாறை முத்தையா கோவில் விழா இன்று வெகுவிமர்சையாக நடைபெற்றுள்ளது. இவ்விழாவில் பாரம்பரிய முறைப்படி ஆண் பக்தர்கள் மட்டுமே பங்கேற்றனர். இந்த விழாவில் பலியிடப்படுவதற்காக ஆடுகள் கோவிலிலேயே வளர்க்கப்படுகின்றன. 

இந்த ஆடுகள் மேய்ச்சலுக்காக வயல் மற்றும் விளைநிலங்களில் உணவை தேடி செல்லும்போது முத்தையா சாமியே வந்து தங்களது வயலில் இரை தேடுவதாக நம்பிக்கை வைத்து அந்த ஆடுகளை பொதுமக்கள், விவசாயிகள் என யாரும் விரட்டமாட்டார்கள். 

ஆண்டு தோறும் தை மற்றும் மாசி மாதத்தில் நடைபெறும். ஆனால், இந்த ஆண்டு கரும்பாறை முத்தையா கோவில் திருவிழா வைகாசி மாதமான இன்று காலை தொடங்கிய நிலையில் கோவிலில் சாமிக்கு பொங்கல் வைத்து வழிபாட்டை தொடங்கிய பின்னர், நேர்த்திக்கடனாக செலுத்தப்பட்ட 100 ஆடுகள் பலியிடப்பட்டு 2500 கிலோ அரிசியை பயன்படுத்தி சாதத்துடன் உணவாக சமைக்கப்பட்டது.

இந்த கறி விருந்தில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்களுக்கு விருந்து வழங்கப்பட்டது. இந்த விருந்தானது வாழை இலையில் சாதமும் ஆட்டுகறி குழம்பும் ஆண்களுக்கு பரிமாறப்பட்டது. இதனை சாப்பிட்ட பிறகு இலையை எடுக்காமல் அப்படியே விட்டுச் செல்வது வழக்கம். ஒரு வாரத்திற்கு பின்பு இலைகள் காய்ந்த பிறகே பெண்கள் கோவிலின் தரிசனத்திற்கு வருவார்கள்.

இந்த கறிவிருந்தில் திருமங்கலம்., சொரிக்கம்பட்டி. , பெருமாள்கோவில்பட்டி., கரடிக்கல்., மாவிலிபட்டி., செக்கானூரணி.,சோழவந்தான்., கருமாத்தூர்., செல்லம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான ஆண் பக்தர்கள் கலந்துகொண்டனர்.

இந்த விழாவானது சமூக நல்லிணக்கத்திற்காக நடத்தப்படுகிறது. குழந்தை வரம், வேலைவாய்ப்பு, உடல் ஆரோக்கியத்திற்காக நேர்த்திக்கடனுக்காக ஆடுகளை கோவிலுக்கு நேர்த்திகடன் செலுத்துவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: விவசாயத்திற்கு திறக்கப்படாமல், தனியார் நிறுவனங்களுக்கு திறந்துவிடப்படும் மணிமுத்தாறு ஆணை நீர்!