இ.பி.எஸ், எஸ்.பி.வேலுமணி ஆதரவாளர்கள் வீட்டில் இரண்டாவது நாளாக வருமான வரி சோதனை
கீழடி மன்னார் கோட்டையில் உள்ள தொழிலதிபரின் வீடு, கல்குவாரி மற்றும் பஞ்சாலை ஆகிய இடங்களில் நடைபெற்ற சோதனையில் முக்கிய ஆவணங்கள், தங்க நகைகள் மற்றும் பணம் கைப்பற்றப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
விருதுநகர், கோவை உள்ளிட்ட இடங்களில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் உறவினர்கள் வீடுகளில் வருமான வரித்துறையினர் 2வது நாளாக சோதனை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் தொழிலதிபர் செய்யாத்துரை என்பவருக்கு சொந்தமான நெடுஞ்சாலைத்துறை தனியார் ஒப்பந்த நிறுவனம் மற்றும் அவரது வீடுகளில் இரண்டாவது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை செய்து வருகின்றனர். இதனிடையே கீழடி மன்னார் கோட்டையில் உள்ள தொழிலதிபரின் வீடு, கல்குவாரி மற்றும் பஞ்சாலை ஆகிய இடங்களில் நடைபெற்ற சோதனையில் முக்கிய ஆவணங்கள், தங்க நகைகள் மற்றும் பணம் கைப்பற்றப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதையடுத்து அந்தத் தனியார் நிறுவனம் மற்றும் அவரது வீடுகள் என ஐந்து இடங்களில் வருமான வரித் துறையினர் தொடர்ந்து சோதனை செய்து வருகின்றன.
தொடர்ந்து, ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக செயல்பட அதிமுக நிர்வாகிகளுக்கு அந்தத் நிறுவனம் மற்றும் அதன் உரிமையாளர்கள் மூலம் பணப்பட்டுவாடா செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
கோவையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணியின் நெருங்கிய நண்பரும், அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழின் பதிப்பாளருமான வடவள்ளி சந்திரசேகர் வீட்டில் 12 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நிறைவடைந்தது. இந்த சோதனையின்போது பல்வேறு ஆவணங்களை கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.