தமிழ்நாட்டில் கல்வியை ஜனநாயகபடுத்தியதால்...ஜெயரஞ்சன் விளக்கம்!

ஆரம்பக்கல்வியில் பெரும் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு விட்டது

தமிழ்நாட்டில் கல்வியை ஜனநாயகபடுத்தியதால்...ஜெயரஞ்சன் விளக்கம்!

கல்வியை ஜனநாயகப்படுத்தி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியதால் பிற மாநிலங்களை காட்டிலும் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக திகழ்வதாக, பெரியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற விழாவில், மாநில திட்டக்குழு துணை தலைவர் ஜெயரஞ்சன் பேசினார்.

 சிறப்பு சொற்பொழிவு

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் செயல்பட்டு வரும் கலைஞர் ஆய்வு மையம் சார்பில் முத்தமிழறிஞர் கலைஞர் சிறப்பு பொழிவரங்கம் நடைபெற்றது. துணைவேந்தர் ஜெகநாதன் தலைமை வகித்த இந்நிகழ்வில் கருணாநிதி உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. கலைஞர் சிறப்பு பொழிவரங்கில் மாநில திட்டக்குழு துணை தலைவர் ஜெயரஞ்சன் கலந்துகொண்டு பேசினார்.

அப்போது நூறாண்டுகளுக்கு முன்பு தமிழகம் எப்படி இருந்தது, இப்போது எப்படி இருக்கிறது என்பதை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். விடுதலைக்கு பிறகும் கூட தொழில் துறை சிறிய அளவிலேயே இருந்தது. பெரும் திரளான மக்களுக்கு இதன் மூலம் வேலை வாய்ப்பு கிடைக்காததால் வறுமை நீடித்தது. ஆண்டுக்கு 120 நாட்கள் வரை வேலை கிடைத்தாலே பெரிய விஷயமாக இருந்தது. சாதிய கட்டமைப்பு, வறுமை, வேலை வாய்ப்பின்மை போன்றவை பெரிதாக இருந்தது. உணவு தானியம் உற்பத்தியில் இலக்கை அடைந்து, அவை மக்களை அடைவதற்கான திட்டமிடல் சிறப்பாக அமைந்திருந்தது.

ரேஷன் அட்டைகள் பரவலாக்கம்

இதன் ஒரு பகுதியாக சென்னை மற்றும் கோவையில் மட்டுமே இருந்த ரேஷன்கார்டு செயல்பாட்டினை மாநிலம் முழுவதிற்குமாக அப்போதைய முதலமைச்சர் கலைஞர் மாற்றினார். கல்வியில் எல்லோரும் வந்து சேர வேண்டும், கல்வி ஜனநாயகப்படுத்தப் பட வேண்டும், இதை ஊக்குவிப்பதற்காகவே மதிய உணவு திட்டம், காலை உணவுத் திட்டம் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

 போக்குவரத்தை ஏற்படுத்தியும், 1970-ம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு பணிகள் காரணமாகவே தமிழ்நாடு இன்று முன்ணணி மாநிலமாக உள்ளது. தொழில் வளர்ச்சியில் மகாராஷ்டிராவை தாண்டி தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. கல்வி ஜனநாயகப்படுத்தியதால் தான் தமிழகம் வளர்ந்த மாநிலமாக மாறியது. இன்னும் செல்ல வேண்டிய தூரம் அதிகமாக உள்ளது. பீகார் போன்ற மாநிலங்களை நம்முடன் ஒப்பிட முடியாது. எண்ணிக்கையில் நாம் சாதித்துள்ளோம். ஆனால் எண்ணிக்கையின் பின் இருக்கும் தரம் கேள்விக்குரியதாகவே இருக்கிறது. பெரும் பாய்ச்சலில் செல்ல வேண்டிய அவசியம் உள்ளது. கல்வி வேண்டும், கல்வியின் தரம் உயர வேண்டும்.

பாடத் திட்டங்களில் மாற்றம்

அண்மை தேவைகளுக்கேற்ப பாடத் திட்டங்களில் மாற்றம் செய்தால் மட்டுமே 5 மடங்கு வளர்ச்சி, 10 மடங்கு வளர்ச்சி என்கிற பாய்ச்சல் நிகழும். ஆரம்பக்கல்வியில் பெரும் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு விட்டது. உயர்கல்வியின் தரம், உயர்கல்வி கற்போர் எண்ணிக்கை அதிகரிக்க பல்கலைக்கழகங்கள் முன்வர வேண்டும்.

இதற்கான பெரும் பணியை அடித்தளமிட்டு சென்றுள்ளார் கலைஞர். வளர்ந்த நாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களில் செயல்படும் இருக்கைகள் வளர்ச்சியை உறுதிபடுத்துகிறது என்று தமிழ்நாடு அரசு மாநில திட்டக்குழுத் துணைத் தலைவர் ஜெயரஞ்சன் பேசினார்.