தகுதி இல்லாத நபர்களுக்கு வீடு ஒதுக்கீடு... அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற உத்தரவு!

தகுதி இல்லாத நபர்களுக்கு வீடு ஒதுக்கீடு... அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற உத்தரவு!

பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் தகுதி இல்லாத நபர்களுக்கு வீடு ஓதுக்கீடு செய்யப்பட்டது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

திருச்சி மாவட்டத்தை சேர்ந்த வேலுசாமி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில் "கடந்த 2016 ம் ஆண்டு மத்திய அரசால் பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தி தற்போது மக்கள் அதனை பயன்படுத்தி வருகின்றனர். இந்த திட்டத்தின் கீழ் பயனாளிகளாக வருவதற்கு சில விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது. மக்கள் பயன்பெறும் வகையில் விதிகள் உள்ளது" எனக் குறிப்பிட்டுள்ள அவர், "திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே வையம்பட்டி கிராமத்தில்  வறுமைக் கொட்டிற்கீழ் உள்ளவர்களுக்கு இதுபோன்ற திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்கு விண்ணப்பிக்கப்படும். இந்த திட்டத்தின் கீழ் தகுதியானவர்களின் பெயர்களை கிராம சபை கூட்டத்தின் போது தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும். அதன் பெயரில் 47 பேர் கொண்ட விபரங்கள் கொண்ட விண்ணப்பங்கள் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது" எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், "அதில் 17 பேர் இந்த திட்டத்தின் கீழ் பயன்படுவதற்கு தகுதி இல்லை எனவும் கூறப்பட்டது. ஆனாலும் ஊராட்சி மன்ற தலைவர் தலையிட்டால் தகுதி இல்லாத 17 பேர்களுக்கு இந்த திட்டத்தின் கீழ் பணம் ஒதுக்கப்பட்டுள்ளது. இது முற்றிலுமாக சட்டத்துக்கு புறமானது. இதுபோன்று விதியை சட்டத்துக்கு புறமாக தகுதி இல்லாத நபர்களுக்கு அரசு திட்டத்தை வழங்குவது குற்றமாகும்" எனவும், "தகுதி இல்லாத நபர்களுக்கு அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கீடு செய்ததை கண்டறிய வருவாய் கோட்டாட்சியின் கீழ் குழு அமைத்து விசாரணை செய்ய உத்திராட வேண்டும்" எனவும் தனது மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் எம் சுந்தர், சக்திவேல் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, இந்த முறைகேடு தொடர்பாக உதவி திட்ட அலுவலரை விசாரணை அதிகாரியாக நியமித்து முறைகேடு புகார்கள் தொடர்பாக 4 வாரத்தில் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர்.