நாகையில் மீனவருக்கு நேர்ந்த சோகம்!

நாகையில் மீனவருக்கு நேர்ந்த சோகம்!

கடலில் மீன் பிடிக்கும் போது நாகை நம்பியார்நகர்  கிராமத்தைச் சேர்ந்த மீனவர் ஒருவர் பைபர் படகியிலிருந்து கடலில் தவறி விழுந்து உயிரிழந்தார்.

நாகப்பட்டினம் நம்பியார் நகர் கிராமத்தை சேர்ந்த சசிகுமார் என்பவருக்கு சொந்தமான ஃபைபர் படகில் கடந்த 21ம் தேதி அதிகாலை அதே பகுதியை சேர்ந்த ஐயாச்சாமி, ரகு, சிவசங்கரன் உள்ளிட்ட ஐந்து பேர் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர். அன்று இரவு நாகப்பட்டினம் துறைமுகத்தில் நேர் கிழக்கே கடலில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும் பொழுது ஐயாச்சாமி திடீரென கடலில் நிலை தடுமாறி விழுந்தார்.

இதனையடுத்து ஐயாச்சாமியை சக மீனவர்கள்  தேடும் பணியில் ஈடுபட்டனர். மேலும் மீன்வளத்துறை , கடலோர பாதுகாப்பு குழும போலீசாரிடமும் புகார் அளித்தனர்.  கடந்த இரண்டு நாட்களாக பத்திற்கும் மேற்பட்ட பைபர் படகில் சக மீனவர்கள் தேடும் பணியில்  ஈடுபட்டு வந்தனர். இன்று காலை ஐயாச்சாமியின் உடல் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து அவரது உடலை மீட்ட சக மீனவர்கள் நம்பியார் நகர் கிராமத்திற்கு கொண்டு வந்தனர்.

 ஐயாச்சாமியின் உடலை கண்ட மனைவி மற்றும் உறவினர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கதறி அழுதனர். அதனைத் தொடர்ந்து உடலை உடற்கூறு ஆய்வுக்காக நாகப்பட்டினம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு போலீசார் கொண்டு சென்றனர். மீனவர்  உயிரிழந்த சம்பவம் நம்பியார்நகர் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.