இட ஒதுக்கீட்டுக்கான போராட்டத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி!

இட ஒதுக்கீட்டுக்கான போராட்டத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி!

விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் இன்று இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிர் நீத்த தியாகிகளுக்கான வீரவணக்க நாள் நிகழ்ச்சிகளில் பாமக நிறுவனர் ச.ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோர் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர்.

தமிழகத்தில் பிற்பட்ட, மிகவும் பிற்பட்ட மக்களுக்கு கல்வி, வேலைவாய்ப்புகளில் உரிய இட ஒதுக்கீடு கோரி, கடந்த 1987-ஆம் ஆண்டு செப்.17-இல் மருத்துவர் ச.ராமதாஸ் தலைமையில் வன்னியர் சங்கம் சார்பில் நடைபெற்ற போராட்டத்தின் போது நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 21 பேர் உயிரிழந்தனர். இவர்களின் நினைவு தினம் ஆண்டுதோறும் செப்டம்பர் 17 ஆம் தேதி  வீரவணக்க நாளாக பாமக, வன்னியர் சங்கம் சார்பில் கடைப்பிடிக்கப்படுகிறது.

அதன்படி, 31-ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று கடைப்பிடிக்கப்பட்டது. திண்டிவனத்தில் உள்ள வன்னியர் சங்க அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிர் நீத்த 21 தியாகிகளின் படங்களுக்கு பாமக நிறுவனர் ச. ராமதாஸ், அந்தக் கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்பி, கட்சித் தலைவர் கோ.க.மணி ஆகியோர் மெழுகுவர்த்தி ஏற்றிவைத்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் அமைந்துள்ள தியாகிகளின் நினைவிடங்களுக்கு அன்புமணி ராமதாஸ், ஜி.கே.மணி, முன்னாள் எம்பி கோ.தன்ராஜ் உள்ளிட்டோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.