ஆசிரியர் தினம்...சசிகலா அறிக்கை!

ஆசிரியர் தினம்...சசிகலா அறிக்கை!

செப்டம்பர் 5 ஒன்றிய ஆசிரியர் நாளை முன்னிட்டு சசிகலா அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அறப்பணி

ஆசிரியர்பணி அறப்பணி என்று தனது எளிய வாழ்க்கையை ஆரம்பித்து, இந்தியக் குடியரசுத் தலைவராக உயர்ந்த மாமேதை டாக்டர் எஸ். ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாளான செப்டம்பர் 5ஆம் நாளை ஆசிரியர் தினமாக கொண்டாடி மகிழும் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த ஆசிரியர் தின நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். ஆசிரியர் பணியினை ஒரு வேலையாக கருதாமல் சேவையாக எண்ணி வாழ்ந்து கொண்டு இருக்கும் ஒவ்வொரு ஆசிரியருக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாகவும், பெருமை படுத்தும் விதமாகவும் நாம் அனைவரும் ஆசிரியர் தினத்தை கொண்டாடி மகிழ்கிறோம்.

சிறந்த பண்புகளை கற்பிக்கும் ஆசிரியர்கள்

தன்னை உருக்கி உலகிற்கே ஒளியேற்றும் தீபச்சுடர்களாக ஆசிரிய பெருமக்கள் விளங்குகிறார்கள். ஆசிரியர்கள் கல்வியை கற்பிப்பதோடு மட்டுமில்லாமல், நல்லொழுக்கத்தையும், சிறந்த பண்புகளையும், சமூக சிந்தனைகளையும் மாணவ சமுதாயத்திற்கு கற்பிக்கிறார்கள்.

 மாதா, பிதா, குரு, தெய்வம் என்று சொல்வார்கள். நம் பெற்றோர்களுக்கு அடுத்தபடியாக வணங்குவது ஆசிரியர்களைத்தான். ஆசிரியர்கள் தாயாக, தந்தையாக மட்டுமின்றி உற்ற நண்பர்களாக இருந்து மாணவச் செல்வங்களுக்கு சிறந்த கல்வியை அளிக்கின்ற உன்னதப் பணியை சேவை மனப்பான்மையோடு தொடர்ந்து செய்து வருகிறார்கள். எத்தனையோ ஆசிரியர்கள் தங்களுடைய குடும்பத்தைக் கூட கவனிக்காமல் தன்னிடம் பயிலும் மாணவ-மாணவியர்களின் கல்விக்கு முன்னுரிமை அளித்து பணியாற்றி வருகிறார்கள்.

ஆசிரியர்கள் தன்னலமற்றவர்கள்

இதுபோன்ற தன்னலமற்ற ஆசிரியர்களை பெற்று இருப்பதால்தான் நம் மண்ணில் பிறந்த மாணவச் செல்வங்கள் எத்தனையோ துறைகளில் இன்றைக்கும் சிறந்து விளங்குகிறார்கள். நம் நாட்டில் மட்டுமல்லாமல், வெளிநாடுகளிலும் நமது மாணவச் செல்வங்களின் திறமை மிகவும் போற்றப்படுகிறது. இந்த பெருமைகளுக்கெல்லாம் உண்மையான சொந்தக்காரர்கள், தன்னலமற்ற ஆசிரியர்கள் தான் என்பதைத் தெரிவித்து கொள்வதில் நான் மிகவும் பெருமிதம் அடைகிறேன்.

நம் வருங்கால நம்பிக்கை நட்சத்திரங்களான மாணவ சமுதாயத்தினை சிறந்த குடிமக்களாக உருவாக்கிடும் மகத்தான பணியினை ஆசிரியர்கள் ஆற்றிவருகின்றனர். ஆகையால், அறியாமை என்ற இருள் நீக்கி, அறிவு என்ற தீபம் ஏற்றும் ஒவ்வொரு ஆசிரியருக்கும் எனது இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக் கொள்கிறேன்.

இவ்வாறு சசிகலா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.