அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு தமிழறிஞர்களின் அருமை தெரிவதில்லை-சீமான்!

அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு தமிழறிஞர்களின் அருமை தெரிவதில்லை-சீமான்!

பட்டிமன்ற பேச்சாளரும், இலக்கியவாதியுமான  நெல்லை கண்ணன் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் திருநெல்வேலியில் உள்ள அவரது இல்லத்திற்கு வந்தார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். நெல்லைக் கண்ணனின் மகன்கள் மற்றும் உறவினர்களை ஆரத்தழுவி ஆறுதல் தெரிவித்தார். சிறிது நேரம் நெல்லை கண்ணனின் உறவினர்களுடன் உரையாடிய பின்பு செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர் முழுக்க முழுக்க தமிழ் இனம் சார்ந்து நின்றவர் நெல்லை கண்ணன் என்றும், தமிழ்த்தாய் தன் செல்ல மகனை தன் அன்பு மகனை இழந்து விட்டாள் என்பது தான் உண்மை என்று தெரிவித்தார். இந்த தலைமுறை தமிழ் எழுத, படிக்கத் தெரியாமல் வளர்ந்து வரும் சூழ்நிலையில் இதுபோன்ற தமிழ் ஆளுமைகள் இனி வர முடியுமா என்று தெரிவித்தா்.

தமிழ் அறிஞர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வரும் நிலையில் கவிப்பேரரசு வைரமுத்து, வைகோ போன்ற சில ஆளுமைகள் தான் தற்போது இருப்பதாக குறிப்பிட்டவர், அதிகாரத்தில் இருப்பவர்கள் தமிழ் அள்ளிப் பருகுபவர்களாக இல்லை. அதனால் தமிழ் அறிஞர்களின் அருமை அவர்களுக்கு தெரிவதில்லை என்று சீமான் குறிப்பிட்டார்