மளிகை கடையில் கூல்டிரிங்ஸ் வாங்கி குடித்த 13 வயது சிறுமி பலி..!!

சென்னை பெசண்ட் நகரில் மளிகை கடையில் குளிர்பானம் வாங்கி குடித்த 13 வயது சிறுமி, ரத்த வாந்தி எடுத்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 

மளிகை கடையில் கூல்டிரிங்ஸ் வாங்கி குடித்த 13 வயது சிறுமி பலி..!!

சென்னை பெசன்ட் நகர், ஓடை மாநகரைச் சேர்ந்த சதீஷ் - காயத்ரி தம்பதியின் இளைய மகள் தரணி. 13 வயதான தரணி, நேற்று மாலை வீட்டின் அருகில் உள்ள மளிகை கடையில் டோகிடோ கோலா என்ற குளிர்பானத்தை வாங்கி குடித்துள்ளார். குளிர்பானம் குடித்த சில மணித்துளிகளில் சிறுமி வாந்தி எடுக்க ஆரம்பித்ததாக கூறப்படுகிறது.

மூக்கில் இருந்து இரத்தம் கலந்த சளி வந்ததையடுத்து சிறுமி மயக்கமாகியுள்ளார். உடல் முழுவதும் நீலநிறத்தில் மாறிய நிலையில் பயந்து போன சிறுமியின் சகோதரி உடனடியாக தனது அம்மாவை அழைத்துள்ளார். இதனைகண்ட தாய் உடனடியாக தரணியை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதித்த போது அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

தகவலறிந்து வந்த சாஸ்திரி நகர் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக இராயபேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் குளிர்பானம் சிறிதளவை போலீசார் ஆய்வுக்காக எடுத்து சென்றனர். 

சமீபகாலமாக மளிகை மற்றும் சிறு சிறு கடைகளில் பெயர் மற்றும் தேதி ஆகியவை இல்லாமல் தரமற்ற குளிர் பானங்கள் விற்கப்படுவதாக தொடர் புகார்கள் வந்தாலும் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் அலட்சியம் காட்டுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

மேலும் இதுபோன்ற உயிரிழப்புகள் மீண்டும் ஏற்படாமல் தடுக்கும் பொருட்டு உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு செய்யவும் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக சாஸ்திரி நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.