வராக நதியில் வெள்ளப்பெருக்கு... பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

வராக நதியில் வெள்ளப்பெருக்கு... பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக ஆறுகள், சோத்துப்பாறை அணை நிரம்பி வழிவதால் வராக நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 

தேனி மாவட்டம் பெரியகுளம் அதனை சுற்றியுள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக மாலை மற்றும்  இரவு நேரத்தில் தொடர்ந்து பெய்த கன மழையால் கல்லாறு, செழும்பாறு கும்பக்கரை ஆறு உள்ளிட்ட ஆறுகளில் நேற்று மாலை முதல் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. 

மேலும் சோத்துப்பாறை அணை அதன் முழு கொள்ளளவு எட்டிய நிலையில் ஏற்கனவே உபரி நீர் வெளியேற்றப்பட்டு  வரும்  நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த கனமழையால் 462 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

மேலும் பெரியகுளம் பகுதியில் உள்ள கல்லாறு, கும்பக்கரை ஆறு, செலும்பாறு, உள்ளிட்ட ஆறுகளில் வரும் நீர் பெரியகுளம் வராக நதி ஆற்றில் கலந்து செல்வதால் நள்ளிரவு முதல் முதல் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால் வராக நதி ஆற்றங்கரையோர பகுதிகளான பெரியகுளம், வடுகபட்டி, ஜெயமங்களம், மேல்மங்கலம், குள்ளப்புரம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஆற்றங்கரை ஓரம் வசிக்கும் மக்கள் வராக நதி ஆற்றில் குளிக்கவோ, ஆற்றை கடக்கவோ வேண்டாம் என பொதுப்பணித்துறை மற்றும் வருவாய் துறையினர் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.