ராகுல் காந்தி தகுதி நீக்கம் மோடிக்கு எதிராக காங்கிரஸ் கறுப்பு கொடி ஆர்ப்பாட்டம் - காங்கிரஸ் தலைவர் கைது....
நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி தகுதிநீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து, தமிழக காங்கிரஸ் கட்சியினர் கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து ராகுல்காந்தி தகுதிநீக்கம் செய்யப்பட்டதையொட்டி, தமிழகம் வந்த பிரதமருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் கறுப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சென்னை, வள்ளுவர்கோட்டம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 500க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர். அவர்கள், பிரதமருக்கு எதிராக கறுப்பு கொடி ஏந்தியும், எதிர்ப்பு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்களை போலீஸார் கைது செய்தனர்.
மேலும் படிக்க | பிரதமர் மோடி சென்னை வருகை : ஏழு அடுக்கு பாதுகாப்பு! 25 நிமிடங்கள் தடை!!!
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி:
காங்கிரஸ் அரசியல் ரீதியாக தவறிழைக்காத கட்சி. பிரதமர் மற்றும் அதானிக்கு எதிராக கேள்வி எழுப்பினாலோ, நாடாளுமன்றத்தை பற்றி வெளியில் பேசினாலோ என்ன தவறு. நான் எம்.எல்.ஏ-வாக இருந்த காலத்தில் பேசும்போது அவைத் தலைவர் மைக்கை அணைத்து விடுவார். இது தொடர்பாக ஏராளமான முறை நான் பொதுவெளியில் பேசியிருக்கிறேன். இதையே தான் நாடாளுமன்றத்தில் பேசும்போது மைக் அணைக்கப்படுகிறது என ராகுல்காந்தியும் கூறினார். இந்திய ஜனநாயகத்தை அவர் தவறாக பேசவில்லை. ஜனநாயகத்தை மோடி எவ்வாறு கையாள்கிறார் என்று தான் பேசினார். அவரால் ஜனநாயகத்தை தரம் தாழ்த்தி பேச முடியாது. ஏனென்றால் நாட்டின் ஜனநாயகம் காங்கிரஸால் உருவாக்கப்பட்டு, வளர்க்கப்பட்டு, பாதுகாக்கப்பட்டு வருகிறது. அதனை சேதமடைய விடாமாட்டோம் என்பதே காங்கிரஸ் நிலைப்பாடு. ஜனநாயகத்துக்கு எதிரான பாஜகவின் செயல்கள் குறித்து கடுமையாக பிரச்சாரம் செய்ய வேண்டும். ஆயிரமாண்டு காலம் அடிமைப்பட்டு கிடந்த நாட்டில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பிறகே சுதந்திரம், சுயமரியாதை போன்றவை கிடைத்தன. இதற்கு காங்கிரஸார் செய்த தியாகத்தை அவ்வப்போது நினைவுகூர வேண்டும்.
மேலும் படிக்க | பிரதமரை சந்திக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டம்
அகிம்சையே மூலமாகவே ஆழ்ந்த அழுத்தத்தை கொடுக்க முடியும்
பிரதமருக்கு எதிராக தீக்குளிப்பது, விமான நிலையத்துக்கு மாறுவேடத்தில் சென்று எதிர்ப்பை தெரிவிப்பது போன்ற கருத்துகள் முன்வைக்கப்பட்டன. ஆனால் அகிம்சையே மூலமாகவே ஆழ்ந்த அழுத்தத்தை கொடுக்க முடியும். நமது ஆதரவில் இயங்கும் அரசு தமிழக அரசு. நமது லட்சியத்தை அடிப்படையாக கொண்டு இந்த அரசு செயல்படுகிறது. மதவாத எதிர்ப்பு என்ற நேர்கோட்டில் அனைவரும் ஒன்று சேர்ந்துள்ளோம். அதே நேரம், எஸ்சி பிரிவு தலைவர் ரஞ்சன்குமாரை காவல்துறையினர் வீட்டில் சிறை வைத்துள்ளனர். தமிழகத்தில் ஜனநாயக போராட்டம் செய்ய அனுமதியில்லையா. காவல்துறையின் நடவடிக்கை வருத்தமளிக்கிறது.