"மாநில அரசின் சட்டம் மதுபானம் அருந்துவதை ஊக்குவிக்கும் வகையில் உள்ளது" உயர் நீதிமன்றம் கருத்து!

"மாநில அரசின் சட்டம் மதுபானம் அருந்துவதை ஊக்குவிக்கும் வகையில் உள்ளது" உயர் நீதிமன்றம் கருத்து!

மது விலக்கு கொண்டு வர மாநில அரசுகள் சட்டம் இயற்ற வேண்டும் என அரசியல் சட்ட கொள்கைகள் கூறும் நிலையில், மாநில அரசின் சட்டம் மதுபானம் அருந்துவதை ஊக்குவிக்கும் வகையில் உள்ளதாக சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

டாஸ்மாக் மதுபான கடை அருகில் தின்பண்டங்களை விற்பனை செய்வது மற்றும் காலி பாட்டில்களை சேகரிப்பதற்கான பார்களை நடத்துவதற்கான  உரிமங்களுக்கான டெண்டருக்கு விண்ணப்பங்களை வரவேற்று டாஸ்மாக் நிர்வாகம் கடந்த 2022ம் ஆண்டு ஆகஸ்ட் 2 ம் தேதி அறிவிப்பானை வெளியிட்டது. 

தற்போது பார் உரிமம் பெற்றவர்கள் பார் நடத்தும்  இடத்தை டெண்டரில் வெற்றி பெற்றவருக்கு வழங்க வேண்டும் என்று டாஸ்மாக் நிறுவனம் வற்புறுத்துவதாகக் கூறி ஆகஸ்ட் 2 ம் தேதி அறிவிப்பாணைக்கு தடை கோரி திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் உள்ளிட்ட 8 மாவட்டங்களைச் சேர்ந்த பார் உரிமைதாரர்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.

அந்த மனுக்களில், ஏற்கனவே பார் உரிமம் பெற்றுள்ள தங்களுக்கும், டாஸ்மாக் நிர்வாகத்திற்கும் இடையில் அந்த இடத்திற்காக குத்தகை ஒப்பந்தம் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என்றும், நில உரிமையாளருடன் ஒப்பந்தம் செய்துள்ள நிலையில், அந்த இடத்தை மூன்றாம் நபருக்கு வழங்க  நிர்ப்பந்திக்க முடியாது என்றும்  குறிப்பிடப்பட்டிருந்தது. 

தற்போதைய பார் உரிமையாளர்களின் உரிமையை பாதுகாக்காமல் வெளியிடப்பட்டுள்ள டெண்டருக்கு தடை விதிக்க வேண்டும் என்றும், டெண்டரை ரத்து செய்து, உரிமத்தை நீடித்து தர உத்தரவிட வேண்டும் என்று மனுக்களில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி அனிதா சுமந்த், எட்டு மாவட்டங்களில் டாஸ்மாக் பார் டெண்டர் குறித்த அறிவிப்பாணைகளை ரத்து செய்து கடந்த 2022 செப்டம்பர் 30ம் தேதி உத்தரவிட்டார்.  புதிய டெண்டர் அறிவிப்பாணையை வெளியிடும் போது, நில உரிமையாளரிடம் ஆட்சேபமில்லா சான்று பெற வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இந்த உத்தரவை எதிர்த்து டாஸ்மாக் நிர்வாகம் தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்கு, தலைமை நீதிபதி கங்கபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது, மது விலக்கு கொண்டு வர மாநில அரசுகள் சட்டம் இயற்ற வேண்டும் என அரசியல் சட்ட கொள்கைகள் கூறும் நிலையில், மாநில அரசின் சட்டம் மதுபானம் அருந்துவதை ஊக்குவிக்கும் வகையில் உள்ளதாக குறிப்பிட்டார்.

வழக்குகளில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்ததை அடுத்து, தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

இதையும் படிக்க:ரஜினிகாந்த் பவுண்டேஷன் பெயரில் மோசடி; சைபர் கிரைம் விசாரணை!