ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம்.. அடுத்து என்ன...? 

ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம்.. அடுத்து என்ன...? 

நெடிய போராட்டங்களுக்கும், சர்ச்சைகளுக்கும் பிறகு ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா இன்று ஆளுநரின் ஒப்புதலை பெற்று சட்டமாகியுள்ளது. இந்நிலையில் அச்சட்டம் எந்த வகையில் சூதாட்டங்களை தடை செய்கிறது, மேலும் சூதாட்டங்களை விளையாடு பவருக்கும் விளம்பரம் செய்பவருக்கும் என்ன தண்டனைகள் வழங்கப்படும் என்பதை இந்த பதிவில் பார்ப்போம். 
 
முதலில், இந்த சட்டப்படி, தமிழகத்தில் பணத்தையோ அல்லது வேறு ஏதேனும் பொருளையோ வைத்து, ஆன்லைன் மூலம் நடைபெறும் சூதாட்டங்கள் மற்றும் விளையாட்டுகளுக்கு தடை விதிக்கப்படுகிறது. ஆன்லைன் விளையாட்டு சேவை வழங்கும் நிறுவனங்கள், இனி அந்த சேவையை வழங்கவும் தடை விதிக்கப்படுகிறது. எந்த நிறுவனமும், எந்த வகையிலும் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகள் தொடர்பாக விளம்பரம் செய்ய தடைவிதிக்கப்படுகிறது.

மேலும், இதுபோன்ற விளையாட்டு நிறுவனங்கள் மற்றும் விளையாடுவோர் இடையே பணப் பரிவர்த்தனை மேற்கொள்ள வங்கிகள், பேமென்ட் வங்கிகளுக்கும் தடை விதிக்கப்படுகிறது. 

எவரேனும் பணத்தை வைத்து ஆன்லைன் சூதாட்டம், ஆன்லைன் விளையாட்டு ஆகியவற்றை விளையாடினால் 3 மாதங்கள் வரை சிறை அல்லது ரூ.5 ஆயிரம் வரை அபராதம் அல்லது இவை இரண்டும் தண்டனையாக விதிக்கப்படும். அதேபோல, ஆன்லைன் சூதாட்டம் தொடர்பாக விளம்பரம் செய்தால் ஓராண்டு வரை சிறை அல்லது ரூ.5 லட்சம் வரை அபராதம் அல்லது இவை இரண்டும் தண்டனையாக விதிக்கப்படும்.

மேலும், இதுபோன்ற சூதாட்டங்களில் ஏற்கெனவே தண்டனை பெற்றவர்கள், அடுத்தடுத்து தண்டனை பெறும்போது ஓராண்டுக்குக் குறையாமல், 3 ஆண்டுகளுக்கு மிகாமல் சிறைத் தண்டனை அல்லது ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை அபராதம் அல்லது இவை இரண்டும் தண்டனையாக விதிக்கப்படும்.

இதற்காக அரசு ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குபடுத்த தனி ஆணையத்தை அமைக்க வேண்டும். அந்த ஆணையத்தின் தலைவராக, அரசு தலைமைச் செயலருக்கு குறையாத பதவி வகித்து, ஓய்வுபெற்ற அதிகாரியை நியமிக்க வேண்டும். மேலும், காவல் துறை ஐ.ஜி., தகவல் தொழில்நுட்ப வல்லுநர், மனநல ஆலோசகர், ஆன்லைன் விளையாட்டில் அனுபவம் வாய்ந்த ஒருவர் ஆகியோரை உறுப்பினராக நியமிக்க வேண்டும். இவ்வாறு அந்த சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.