யார் இந்த சிவதாஸ் மீனா? அடுத்த புதிய தலைமை செயலாளா்?

யார் இந்த சிவதாஸ் மீனா? அடுத்த புதிய தலைமை செயலாளா்?

இறையன்புவின் பதவிக்காலம் நாளையுடன் நிறைவடையவுள்ள நிலையில், அடுத்த தலைமை செயலாளராக சிவதாஸ் மீனா நியமிக்கப்படவுள்ளதாகவும், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாக உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2021 ல் திமுக ஆட்சி அமைத்த போது, அன்றைய தினமே தலைமை செயலாளராக இறையன்பு ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டார். அவருக்கு தற்போது 60 வயது நிறைவடைந்துவிட்டதால் நாளையுடன் இறையன்புவின் பதவிக்காலம் முடிவடைந்து ஓய்வு பெறுகிறார். இதனால் அடுத்த புதிய தலைமைச் செயலாளர் யார் என்ற எதிர்பார்ப்புகள் எழுந்தன. இதனிடையே, தமிழ்நாட்டில் ஐஏஎஸ் அதிகாரிகள் பட்டியலில் முதன்மையாக உள்ள ஹன்ஸ்ராஜ் வர்மா, எஸ்.கே.பிரபாகர் மற்றும் சிவதாஸ் மீனா ஆகிய 3 பேரின் பெயர்கள் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியானது.

இந்நிலையில்  தற்போது நிர்வாகத்துறை செயலாளராக பொறுப்பு வகிக்கும் சிவதாஸ் மீனாவை, அடுத்த புதிய தலைமை செயலாளராக நியமிக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்து, இதுகுறித்து மத்திய அரசிடம் அறிவித்துள்ளதாகவும், இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகும் எனவும்  தகவல் வெளியாகியுள்ளது.

யார் இந்த சிவதாஸ் மீனா?:

புதிய தலைமை செயலாளராக தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள சிவ்தாஸ் மீனா, ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர். பொறியியல் பட்டதாரியான இவர், ராஜஸ்தானி, தமிழ், ஆங்கிலம், இந்தி, ஐப்பான் ஆகிய மொழிகளில் வல்லமை பெற்றவர். 1989 ஆம் ஆண்டு ஐஏஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று தமிழக கேடரில் ஐஏஎஸ் அதிகாரியாக பணியில் சேர்ந்த சிவதாஸ் மீனா, முதலில் காஞ்சிபுரம் உதவி கலெக்டராக பணியை தொடங்கினார். பின்னர், கோவில்பட்டி உதவித் கலெக்டராகவும், வேலூர் கூடுதல் கலெக்டராகவும், மாவட்ட கலெக்டர் என அடுத்தடுத்து முக்கிய பொறுப்புகளை வகித்து வந்தார்.

கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்தில் ஊரக வளர்ச்சித் துறை, நில நிர்வாகத் துறை, போக்குவரத்துத் துறை என பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய இவர், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் முதன்மை செயலாளர் உள்பட பல முக்கிய பதவிகளை வகித்து வந்தார். இப்படி பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்த இவர், தற்போது நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளராக பணியாற்றி வருகிறார். 

இந்நிலையில் தலைமை செயலாளர் இறையன்புவின் பதவிக்காலம் நாளையுடன் முடிவடையவுள்ளதால், அடுத்த தலைமை செயலாளராக சிவதாஸ் மீனாவை தமிழ்நாடு அரசு தேர்வு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் இன்று வெளியாகும் நிலையில், தமிழக அரசின் 49 வது தலைமைச் செயலாளராக சிவதாஸ் மீனா பொறுப்பு வகிப்பார் என்பதும், அவருடைய பதவிக்காலம் 2025-ம் அக்டோபர் மாதம் வரை இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.