தனியார் வசமான மீன்பிடி உரிமை...! மீனவர்கள் வருவாய் இழப்பு..!! நடவடிக்கை எடுக்குமா மாவட்ட நிர்வாகம்...?

தனியார் வசமான மீன்பிடி உரிமை...! மீனவர்கள் வருவாய் இழப்பு..!! நடவடிக்கை எடுக்குமா மாவட்ட நிர்வாகம்...?

வைகை அணையில்  தனியார் வசமான மீன்பிடி உரிமை கூலி பிரச்சினையால் ஒருமாதமாக மீன்பிடித் தொழில் நிறுத்தப்பட்டதால் மீனவர்கள்  வருவாய் இன்றி பாதிக்ப்பட்டுள்ளனர்.

ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணையில் மீன்பிடி தொழில் நடைபெற்று வருகிறது. இங்கு கூட்டுறவு சங்கத்தில் பதிவு செய்யப்பட்ட மீனவர்கள் மூலம் மீன்கள் பிடிக்கப்பட்டு வந்தது.  பிடிக்கப்படும் மீன்களில்,பாதி மீனவர்களுக்கும் பாதி மீன்வளத்துறைக்கும் வழங்கப்பட்டு பொதுமக்களுக்கு கிலோ ரூ-130க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் வைகை அணையில் மீன்பிடிக்கும் உரிமை தனியாருக்கு வழங்க முடிவு செய்தது தேனி மாவட்ட நிர்வாகம். கடந்த மாதம் நடைபெற்ற டெண்டரில் கோவையை சேர்ந்த ஜஹாங்கீர் என்பவர் ரூ.82 லட்சத்திற்கு மீன்பிடிக்கும் உரிமையை ஏலம் எடுத்தார். மீன்பிடி உரிமை தனியாருக்கு மாறினாலும் மீனவர்கள் விஷயத்தில் பழைய நடைமுறையே தொடரும் என்று கூறப்பட்டது. 

இந்த நிலையில் மீனவர்கள் பிடிக்கும் கட்லா, மிருகால், ரோகு வகை மீன்களுக்கு கிலோவிற்கு ரூ.30ம், ஜிலேபி ரக மீன்களுக்கு ரூ35ம் மீன்பிடி உரிமையை பெற்ற தனியார் நிறுவனம் கூலியாக நிர்ணயம் செய்ததாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மீனவர்கள் மீன்பிடி தொழிலில் பழைய நடைமுறையை தொடர வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

மீன்பிடி விசயத்தில் பழைய நடைமுறை தொடர வேண்டும் என்பதே எங்களின் நிலைப்பாடு. ஆனால் தற்போது மீன்பிடி தனியார் வசம் சென்றதால், மீனவர்களுக்கான கூலியை குறைத்துள்ளனர். கூலி பிரச்சினை தொடர்பாக தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். ஒருமாதமாக மீன்பிடிப்பது நிறுத்தப்பட்டுள்ளதால் எங்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வருவாய் இன்றி குடும்பம் நடத்த முடியாத சூழ்நிலைக்கு மீனவர்கள் தள்ளப்பட்டுள்ளனர். எனவே கூலிப்பிரச்சினை குறித்து அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.