14,850 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்… 4 பேர் கைது!  

திருவண்ணாமலை 19 டன் ரேஷன் அரிசி பதுக்கிய நான்கு நபர்கள் கைது செய்யப்பட்டனர்.  

14,850 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்… 4 பேர் கைது!   

திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அ.பவன்குமார் ரெட்டி அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி, மாவட்ட தனிப்படை உதவி ஆய்வாளர் சத்யாநந்தன், தலைமை காவலர்கள்  மற்றும் தனிப்படை காவலர்கள், திருவண்ணாமலை மாவட்டம், மங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, வள்ளிவாகை புதூர் கிராமத்தில்  சோதனை செய்தனர். அப்போது சந்திரன்  என்பவரது குடோனில், திருவண்ணாமலை சார்ந்த ஆறுமுகம்,  என்பவர் சுமார் 45 கிலோ எடையுள்ள 330 மூட்டை தமிழக அரசு பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வழங்கும் ரேஷன் அரிசியை பதுக்கி வைத்திருந்ததும் மற்றும் ரேஷன் அரிசியை TN23 AV 9993 என்ற பதிவெண் கொண்ட டிப்பர் லாரியில் ஏற்றிக் கொண்டிருந்ததும் தெரியவந்ததையடுத்து ரேஷன் அரிசியை பதுக்கிய ஆறுமுகம், குடோன் உரிமையாளர் அண்டம்பள்ளம் கிராமத்தை சேர்ந்த சந்திரன் மற்றும் லாரி டிரைவர் ராமு,  என்பவர்களை கைது செய்தனர்.

தொடர்ந்து  அவர்களிடமிருந்து 14,850 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் ஆறுமுகத்தை விசாரணை செய்ததில் இருந்து கிடைத்த தகவலை அடுத்து, ஆறுமுகத்தின் அண்ணன் ஏழுமலை என்பவரது வீட்டில் சோதனை செய்தபோது, அங்கு 25 கிலோ எடை கொண்ட 170 மூட்டை ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருப்பதும், மேலும் ரேஷன் அரிசியை TN25 F6432 என்ற பதிவெண் கொண்ட டாடா ஏஸ் வாகனத்தில் ஏற்றி கொண்டிருப்பதும் தெரியவந்தது.

இதையடுத்து ஏழுமலையை கைது செய்து அவரிடமிருந்து 4250 கிலோ ரேஷன் அரிசி மற்றும் ஒரு டாடா ஏஸ் வாகனம்  பறிமுதல் செய்யப்பட்டது. மொத்தமாக கைது செய்யப்பட்ட நான்கு 4 நபர்கள் மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட 19,100 கிலோ ரேஷன் அரிசி, ஒரு டிப்பர் லாரி மற்றும் ஒரு டாடா ஏஸ் வாகனத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவுப்படி குடிமை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டது.