பேருந்தில் வெடிகுண்டு வீச திட்டம் : சிறுவர்கள் உள்பட 5,பேர் ஆயுதங்களுடன் கைது.

பேருந்தில் வெடிகுண்டு வீச திட்டம் : சிறுவர்கள் உள்பட 5,பேர் ஆயுதங்களுடன் கைது.

இராமநாதபுரம்: பேருந்தில், பெட்ரோல் குண்டு வீச திட்டம் தீட்டிய இரண்டு  சிறுவர்கள் உள்பட 5,பேர் ஆயுதங்களுடன் கைது.

இராமநாதபுரம் சிவஞானபுரம் இரயில்வே டிராக் அருகே போலிசார் ரோந்து பணி செய்தனர். ரயில்வே கேட் அருகே சந்தேகத்திற்கு இடமான வகையில்  5 பேர் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த நிலையில் போலிசார் வருவதை கண்டவுடன் தப்பி  ஓடியுள்ளனர்.

அதனை தொடர்ந்து  போலிசார் விரட்டி பிடித்து சோதனை நடத்தினர். அவர்களிடம் கத்தி ,அரிவாள் போன்ற ஆயுதங்கள் இருந்துள்ளது. அதனை தொடர்ந்து ஆயுதங்களை பறிமுதல் செய்த போலிசார் 5 பேரையும் கேணிக்கரை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து  விசாரணை நடத்தினர்.

அதில், கடந்த சில தினங்களுக்கு முன் நீதிமன்றத்தில் இதே பகுதியை சேர்ந்த அசோக்குமார் என்ற ரவுடியை  ஆர்எஸ்.மடையை சேர்ந்த ரவுடி  கொக்கி குமார்  வாளால் வெட்டி தாக்கினார். இச்சம்பவத்திற்காக, பழிவாங்க அரசுக்கு எதிராக ஏதாவது ஒரு மிகப்பெரிய சம்பவம் செய்ய வேண்டும்  என அசோக்குமார்  தரப்பினர் திட்டம் தீட்டியுள்ளது தெரியவந்துள்ளது.  

மேலும், இன்னும் சில தினங்களில் ஏதாவது ஒரு பேருந்தில், பெட்ரோல் குண்டு வீசி பொதுமக்களை அச்சுறுத்த சதி திட்டம் தீட்டியுள்ளது  போலிஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. அதனை தொடர்ந்து 5பேர் மீதும் வழக்கு பதிவு செய்த போலிசார்  மூன்று பேரை தேனி சிறைச்சாலையிலும், இருவர் சிறுவர்கள் என்பதால் மதுரையில் உள்ள   சிறுவர்களுக்கான சிறைச்சாலைக்கும் அனுப்பியுள்ளனர்.