ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான இடங்களில் 5-வது நாளாக சோதனை...!

திமுக எம்.பி., ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான இடங்களில், வருமான வரித்துறை அதிகாரிகள் 5-வது நாளாக சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 

முன்னாள் மத்திய இணை அமைச்சரும், திமுக எம்.பியுமான ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமாக மதுபான ஆலை, கல்வி நிறுவனங்கள், துறைமுக பணிகள் மற்றும் நகை தயாரிப்பு என பல்வேறு நிறுவனங்கள் உள்ளன. இந்நிலையில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரின் பேரில் ஜெகத்ரட்சனுக்கு சொந்தமான 40-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த 5-ஆம் தேதி முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.  

அதன்படி, சென்னை அடையாறில் உள்ள ஜெகத்ரட்சகன் வீடு, தியாகராய நகரில் உள்ள நட்சத்திர ஓட்டல், ஆழ்வார் ஆராய்சி மையம், குரோம்பேட்டையில் உள்ள ரீலா மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் அதிகாரிகள் அதிரடி ஆய்வில் ஈடுபட்டனர். 

இதில் அடையாறில் உள்ள ஜெகத்ரட்சகனின் வீட்டில் நடைபெற்ற சோதனையில் 10 கோடி ரூபாய் பணம், கோடிக்கணக்கான வெளிநாட்டு கரன்சிகள் மற்றும் சொத்து ஆவணங்கள் உள்ளிட்டவற்றை வருமான வரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். ஜெகத் ரட்சகன் வீட்டில் கைப்பற்றப்பட்ட கணக்கில் காட்டாத நகைகளை கணக்கிடும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். 

இதேபோல், பூவிருந்தவல்லியை அடுத்த தண்டலத்தில் உள்ள சவிதா கல்லூரிக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற சோதனையில், கோடிக்கணக்கான பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில், சவிதா மருத்துவமனையில் உள்ள பிரேத பரிசோதனை அறையில் இருந்து சுமார் 50 கோடி ரூபாய் அளவுக்கு பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை வட்டராத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.