விவசாயிகள் இயக்க செயலாளர் கொலை...! சிறுவன் உட்பட 6 பேர் கைது...!!

விவசாயிகள் இயக்க செயலாளர் கொலை...! சிறுவன் உட்பட 6 பேர் கைது...!!

தமிழ்நாடு விவசாயிகள் இயக்க மாநில செயலாளர் கொலை வழக்கில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர், சிறுவன் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருச்சி மாவட்டம், சிறுகனூர் அருகே எம்.ஆர்.பாளையம் கிழக்கு காலனியில் வசித்து வந்தவர் 60 வயதான சண்முகசுந்தரம். இவர் தமிழ்நாடு விவசாயிகள் இயக்க மாநில செயலாளராக பதவி  வகித்து வந்தார். கடந்த 15 நாட்களுக்கு முன்பு இவரது மனைவி வளர்மதி கோபித்துக் கொண்டு தன் அண்ணன்  வீட்டுக்கு சென்று விட்டார். இந்நிலையில் இவரது அக்கா மகன் ஆனந்த் தினமும் சண்முகசுந்தரத்திற்கு மூன்று வேளையும் சாப்பாடு எடுத்து வந்து கொடுத்துள்ளார். கடந்த 29 ம் தேதி இரவு ஆனந்த் சண்முகசுந்தருக்கு சாப்பாடு கொடுத்து விட்டு சென்றுள்ளார்.விவசாய சங்க மாநில செயலாளர் வெட்டிக்கொலை

இந்நிலையில்  வீட்டில் தனியாக இருந்த  சண்முகசுந்தரத்தை வீட்டிற்கு கடந்த 30 ந்தேதி அதிகாலை வந்த மர்ம நபர்கள் அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்தனர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே இரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். மறுநாள் காலை வழக்கம் போல் சாப்பாடு கொடுக்க வந்த போது சண்முகசுந்தரம் வெட்டுக்காயங்களுடன் பிணமாக கிடந்தது தெரியவந்தது. இது குறித்து சிறுகனூர் போலீசார் வழக்கு பதிவு விசாரணை செய்தனர். மேலும் இந்த வழக்கில் கொலையாளிகளை பிடிப்பதற்காக திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார் உத்தரவின்படி  லால்குடி துணை சூப்பிரண்டு அஜய்தங்கம் தலைமையில் சிறுகனூர்  சமயபுரம், லால்குடி காவல் ஆய்வாளர்கள் கொண்ட 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடி வந்தனர்.

இந்நிலையில் எம்.ஆர்.பாளையம் பகுதியில் உள்ள அரசு நிலம் சம்பந்தமாக அப்பகுதியைச் சேர்ந்த சிலருக்கும், சண்முகசுந்தரத்திற்கும் முன் விரோதம் இருந்தது வந்துள்ளது. இந்நிலையில், இந்த கொலை சம்பந்தமாக நேற்று முன்தினம்  திருச்சி கீழப்புலிவார்டு சாலையில் உள்ள சிறுவர் கூர்நோக்கு இல்ல நீதிமன்றத்தில் சிறுவன் ஒருவன் சரணடைந்தான். மேலும்  இந்த கொலை வழக்கில் விசாரணை முடுக்கி விடப்பட்டு மற்ற குற்றவாளிகளை தேடி வந்தனர். போலீசார் தீவிரமாக தேடி வருவதை அறிந்த  சணமங்கலம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் அறிவழகன், எம்.ஆர்.பாளையம் பகுதியைச் சேர்ந்த பால்ராஜ், கார்த்திகேயன், சண்முகவேல், இளவரசன் உள்ளிட்ட 5 பேரும் சணமங்கலம் கிராம நிர்வாக அலுவலகத்தில்  சரணடைந்தனர். இதனைத் தொடர்ந்து எதிரிகள் ஐந்து பேரையும் கிராம நிர்வாக அலுவலர் சிறுகனூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். 

போலீசார் விசாரணையில் பல வருடங்களாக அரசு நிலம் சம்பந்தமாக பிரச்சனை இருந்து வந்ததில் முன்விரதம் காரணமாக சிறுவன் உட்பட ஐந்து பேரும் கூட்டு சதி செய்து திட்டமிட்டு சண்முகத்தை கொடுர  முறையில் வெட்டி கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. மேலும் குற்றவாளிகள் கொலைக்கு பயன்படுத்திய அரிவாள், பிச்சுவாகத்தி, இரண்டு மோட்டார் பைக் ஆகியவற்றை போலீசார் பறிமுதல்  செய்தனர். இதனைத் தொடர்ந்து சணமங்கலம் பகுதி சேர்ந்த சண்முகசுந்தரத்தின் உறவினரான ஆனந்த் கொடுத்த புகாரின் பேரில் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்த சிறுகனூர் போலீசார் அவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர். கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட சிறுவனை சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தனர்.

இதையும் படிக்க:பிக் பாஸில் அசிம் போலியாக வெற்றி பெற்றதாக கமிஷ்னர் அலுவலகத்தில் புகார்...!!