இளம்பெண்ணிடம் திருமணம் செய்வதாக ஆசைவார்த்தைக் கூறிய பலே மோசடி நாயகன்...போலீசாரிடம் சிக்குவானா..?
திருமணம் செய்துகொள்வதாக ஆசைவார்த்தைக்கூறி இளம்பெண்ணிடம் இளைஞர் ஒருவர் 5 லட்சம் ரூபாய் மோசடி செய்த சம்பவம் புதுச்சேரியில் அரங்கேறியுள்ளது.
புதுவை லாஸ்பேட்டை பகுதியை சேர்ந்தவர் 23 வயது இளம்பெண். இவர் அதே பகுதியில் உள்ள துணிக்கடை ஒன்றில் வேலைபார்த்து வந்தார். அந்த கடையின் முதல் மாடியில் காரைக்காலை சேர்ந்த தினகரன் என்பவர் தங்கி தனியார் கல்லூரியில் எம்.பி.ஏ. படித்து வந்துள்ளார்.
இந்நிலையில் தினகரனுக்கும், அந்த இளம்பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு காதல் மலர்ந்துள்ளது. அவர்கள் இருவரும் நெருங்கி பழகிவந்ததாகவும் தெரிகிறது. இதற்கிடையே தினகரன் அந்த இளம்பெண்ணின் பெற்றோரிடம் சென்று பெண் கேட்டுள்ளார். அவரது பெற்றோரும் படிப்பு முடிந்ததும் திருமணம் செய்து கொடுப்பதாக தெரிவித்துள்ளனர்.
இதனிடையே தினகரன் கல்விக்கட்டணம் கட்டுவதற்காகவும், செலவுக்காவும் கேட்க,அதை உண்மை என நம்பி அவருக்கு ரூ.5 லட்சம் வரை அந்த பெண் கொடுத்துள்ளார். மேலும் தினகரனுக்கு பிறந்தநாள் பரிசாக ரூ.55 ஆயிரம் மதிப்புள்ள செல்போனும் வாங்கி கொடுத்துள்ளார்.
இதனையடுத்து படிப்பு முடிந்து காரைக்கால் சென்ற தினகரன் தன்னிடம் நம்பிக்கை மோசடி செய்து வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்துகொண்டதாக அந்த இளம்பெண் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் தினகரன் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் திருமணம் செய்துகொள்வதாக ஆசைவார்த்தைக்கூறி இளம்பெண்ணிடம் இளைஞர் ஒருவர் 5 லட்சம் ரூபாய் மோசடி செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.