2000 வாழை மரங்கள் வெட்டி சாய்ப்பு... நாமக்கலில் பரபரப்பு!! 

நாமக்கல் மாவட்டம் ஜேடர்பாளையம் அருகே விவசாயத் தோட்டத்தில் இருந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள், 200 பாக்கு மரங்களை மர்ம நபர்கள் வெட்டி சாய்த்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பரமத்தி வேலூர் வட்டம் கொத்தமங்கலத்தில் தர்மலிங்கம் என்பவருக்கு சொந்தமான இரண்டு ஏக்கர் விவசாய தோட்டத்தில் உள்ள 1750 வாழை மரங்களை நேற்று இரவு சில மர்ம நபர்கள் வெட்டி சாய்த்துள்ளனர். அதன் அருகில் உள்ள வக்கீல் சுப்பிரமணியம் என்பவருக்கு சொந்தமான 200 பாக்கு மரங்கள், 250 வாழை மரங்கள் போன்றவற்றையும் வெட்டி சாய்த்துள்ளனர்.  

காலையில் வழக்கம்போல் தோட்டத்திற்கு வந்த தர்மலிங்கம், தனது வாழை மரங்கள் வெட்டி சாய்க்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். உடனடியாக ஜேடர்பாளையம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்த நிலையில், காவல் துறையினர் மற்றும் தடவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, அந்த பகுதியில் உள்ள தடயங்களை சேகரித்ததுடன் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.