மது போதையில் கூலித் தொழிலாளி கொலை... 5 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்...!

மது போதையில் கூலித் தொழிலாளி கொலை... 5 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்...!

திருச்சி திருவெறும்பூர் காவல் சரகத்திற்கு உட்பட்ட பனையக்குறிச்சியை சேர்ந்தவர் ஜெயபால் (37). இவர் கொத்தனார் வேலை பார்த்து வந்தார். அவரின் மனைவி இறந்த நிலையில் இவருக்கு பிரதாப் என்ற 6 வயது மகன் உள்ளார்.

கூலி தொழிலாளியான ஜெயபால், மது போதைக்கு அடிமையானவர் என கூறப்படுகிறது. மேலும் இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த தளபதி, ஹரி, மாசி, சுதாகர், ரகு ஆகியோருக்கும் வீட்டில் மழைநீர் வடிவதில்  ஏற்பட்ட பிரச்சனையால் முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இன்று காலை ஜெயபால் வழக்கம் போல் மது போதையில் தனது வீட்டருகே நின்று கொண்டு, ஆபாச வார்த்தைகளால் திட்டிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது வெளியே வந்த சுதாகர் மற்றும்   அவரது நண்பர்கள் நான்கு பேரும் இதனை தட்டி கேட்டபோது, ஜெயபால் தான் வைத்திருந்த கத்தியால் அவர்களை வெட்ட முயன்றதாக  கூறப்படுகிறது. 

இதனால் ஆத்திரமடைந்த கும்பல், ஜெயபாலை ஓட ஓட விரட்டி இடுப்பு மற்றும் கழுத்து பகுதியில் கத்தியால், குத்தியதுடன் அவர் மீது பெரிய கல்லை போட்டு கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். 

இதுகுறித்து தகவல் அறிந்த, திருவெறும்பூர் போலீசார் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர் சுஜித் குமார், சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.