துப்பாக்கியால் சுட்டுக் கொண்ட ரியல் எஸ்டேட் அதிபர்... சென்னையில் பரபரப்பு சம்பவம்...

சென்னை அடையாறு பகுதியில் ரியல் எஸ்டேட் அதிபர் துப்பாக்கியால் சுட்டுக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

துப்பாக்கியால் சுட்டுக் கொண்ட ரியல் எஸ்டேட் அதிபர்... சென்னையில் பரபரப்பு சம்பவம்...

சென்னை அடையாறு டாக்டர் முத்துலட்சுமி சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் செந்தில் (39). இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இன்று அதிகாலையில் வீட்டில் தனது கைத்துப்பாக்கியால் தன்னைத்தானே இடது பக்க தோள்பட்டையில் சுட்டுக்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அங்கிருந்த உறவினர்கள் செந்திலை மீட்டு சிகிச்சைக்காக ஆயிரம்விளக்கு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதித்தனர்.

தகவல் அறிந்து சாஸ்திரிநகர் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் துப்பாக்கியால் சுட்டுக்கொள்ளும் போது செந்தில் குடிபோதையில் இருந்தது தெரிய வந்துள்ளதாக போலீசார் கூறியுள்ளனர். மேலும் செந்திலின் மனைவி பைரவி டாக்டர் என்பதும், அவர் ஆழ்வார்பேட்டையில் கிளினிக் நடத்தி வருவதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

இவரது மனைவி பைரவிக்கு 27ஆம் தேதி வளைகாப்பு நிகழ்ச்சி நடந்துள்ளது. நிகழ்ச்சி முடிந்து உறவினர்கள் அந்த வீட்டிலேயே இருந்துள்ளனர். அப்போது தான் செந்தில்  துப்பாக்கியாலேயே சுட்டு கொண்டது தெரிய வந்ததாக போலீசார் கூறியுள்ளனர்.

அந்த துப்பாக்கியை போலீசார் கைப்பற்றி உள்ளனர். லைசென்ஸ் பெற்று அவர் துப்பாக்கி வைத்திருந்ததாகவும் அது ரிவால்வர் ரகத்தை சேர்ந்தது என்றும், துப்பாக்கியை கையாண்டபோது தவறுதலாக கையில் சுடப்பட்டதாக செந்தில் வாக்குமூலம் அளித்துள்ளதாக சாஸ்திரி நகர் போலீசார் தெரிவித்துள்ளனர். லைசென்ஸ் பெற்ற துப்பாக்கியாக இருந்தாலும் தவறாக துப்பாக்கியை கையாண்டு அஜாக்கிரதையாக செயல்பட்டதால் செந்தில் மீது சாஸ்திரி நகர் போலீசார் 2 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

செந்திலின் மனைவி பைரவி மீது சமீபத்தில் நடிகை ரைசா வில்சன் புகார் ஒன்றை சமூக வலைதளங்களில் முன்வைத்து இருந்தார். தோல் மருத்துவரான பைரவி தன்னுடைய முகத்திற்கு தவறான சிகிச்சை அளித்ததாக கடந்த ஏப்ரல் மாதம் சமூக வலைதளங்களில் நடிகை ரைசா வில்சன் குற்றம் சாட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது.