ரூ.6 லட்சம் கேட்டு மீன் வியாபாரி கடத்தல்... சினிமா பாணியில் கைது செய்த போலீசார்...

கோவில்பட்டியில் 6 லட்ச ரூபாய் கேட்டு மீன் வியாபாரியை கடத்திய 5 பேர் கொண்ட கும்பலை, திரைப்பட பாணியில் போலீசார் கைது செய்தனர்.

ரூ.6 லட்சம் கேட்டு மீன் வியாபாரி கடத்தல்... சினிமா பாணியில் கைது செய்த போலீசார்...

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் தனது தாயை பார்க்க வந்த சாத்தூரைச் சேர்ந்த மீன் வியாபாரி சிவா என்பவரை காரில் கடத்தி 6 லட்ச ரூபாய் பணம் கேட்டு 3 நாள்களாக சித்தரவதை செய்த கோவில்பட்டி பகுதியை சேர்ந்த மணிகண்டன், ரமேஷ், அகஸ்டின்ராஜா, கருத்தப்பாண்டி, ஏமராஜ் ஆகிய 5 பேரை மேற்கு காவல் நிலைய போலீசார் திரைப்பட பாணியில், சிவா மனைவி மல்லிகா மூலமாக பணம் தருவதாக கூறி, கடத்தியவர்களை சுற்றி வளைத்து கைது செய்தனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய 2 கார்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். காயமடைந்த சிவா கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர், நேதாஜி நகரைச் சேர்ந்த தர்மதுரை மகன் சிவா என்பவர் மீன்கடை நடத்தி தொழில் செய்து வருகிறார். இவர் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ராஜகோபால் நகர் மந்தித்தோப்பு பகுதியில் வசித்து வரும் தனது தாய் செல்லத்தாயை பார்க்க கடந்த 15ந்தேதி ஊருக்கு வந்துள்ளார். ராஜகோபால் நகர் மந்தித்தோப்பு பகுதியில் சென்று  கொண்டு இருந்த சிவாவை காரில் வந்த மர்ம நபர்கள் கடத்திச் சென்று விட்டு, சிவாவின் மனைவி மல்லிகாவிடம் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு உன் கணவரை நாங்கள் கடத்தி வைத்துள்ளோம் என்றும், ரூ.6 லட்சம் கொடுத்தால் விட்டு விடுவதாகவும் கூறி உள்ளனர். 

இதுகுறித்து சிவாவின் மனைவி கடந்த 16ம் தேதி அளித்த புகாரின் பேரில் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இச்சம்பவம் தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் கோவில்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் உதயசூரியன் மேற்பார்வையில் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் சபாபதி தலைமையில் தனிப்படை அமைத்து எதிரிகளை கண்டுபிடித்து விரைந்து கைது செய்ய உத்தரவிட்டார்.

அதன் பேரில் தனிப்படையினர் சிவாவின் மனைவியிடம், தன்னிடம் பணம் இருப்பதாக கடத்தியவர்களிடம் கூற செய்து எங்கு வந்து தரவேண்டும் என்று கேட்க வைத்துள்னர். இதனைதொடர்ந்து நேற்று சிவாவின் மனைவியை கயத்தார் தேசிய நெடுஞ்சாலை பகுதியிலுள்ள ஒரு ஹோட்டல் அருகே பணத்துடன் வரச்சொல்லிய கடத்தல்காரர்கள் அங்கு காத்திருந்துள்ளனர். தனிப்படையினர் சிவாவின் மனைவியை முன்னே செல்லவிட்டு கடத்தல்காரர்களை பிடிப்பதற்காக பின்தொடர்ந்து சென்றுள்ளனர். தனிப்படையினர் வருவதை அறிந்த கடத்தல்காரர்கள் உடனே காரை எடுத்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

அப்போது போலீசில் மாட்டிவிடுவோம் என்று பயந்து செல்லும் வழியிலேயே கடத்தப்பட்ட சிவாவை இருட்டாக உள்ள இடத்தில் இறக்கிவிட்டு சென்றுள்ளனர். இதையடுத்து தனிப்படையினர் கடத்தல்காரர்களை பின்தொடர்ந்து விரட்டி சென்று அவர்களை பிடித்து தீவிர விசாரணை மேற்கொண்டதில், அவர்கள் கோவில்பட்டி, மந்தித்தோப்பு, ராஜகோபால் நகர் முத்து மகன் மணிகண்டன், விஜயன் மகன் ரமேஷ், நாலாட்டின்புதூர் மரியதாஸ் மகன் அகஸ்டின் ராஜா, வடக்கு இலுப்பையூரணி, கருப்பசாமி மகன் கருத்தப்பாண்டி, விஜயாபுரி, நடுத்தெரு ராஜகோபால் மகன் ஏமராஜ் எனத் தெரியவந்தது. 

இதில் மணிகண்டன் என்பவருக்கும் கடத்தப்பட்ட சிவா என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளதும் தெரியவந்துள்ளது.  முன்விரோதம் காரணமாக மணிகண்டன் தனது நண்பர்களுடன் சேர்ந்து சிவாவை கடத்தி பணம் கேட்டதும் விசாரணையில் தெரியவந்தது. காயமடைந்த சிவா கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனையடுத்து மேற்படி தனிப்படை போலீசார் 5 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து கடத்தலுக்கு பயன்படுத்திய 2 கார்களையும் பறிமுதல் செய்தனர்.