கலாஷேத்ரா விவகாரம்...! மனித உரிமைகள் ஆணையம் இன்று விசாரணை...!!

கலாஷேத்ரா விவகாரம்...! மனித உரிமைகள் ஆணையம் இன்று விசாரணை...!!

கலாஷேத்ரா கல்லூரியில் பாலியல் புகார் தொடர்பாக மனித உரிமைகள் ஆணையத்தின் குழு இன்று விசாரணை நடத்த உள்ளது.

மத்திய அரசின் கலாசாரத்துறையின் கீழ் சென்னை திருவான்மியூரில் செயல்பட்டு வரும் கலாஷேத்ரா நாட்டிய கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப் படுவதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக ஏராளமான மாணவ, மாணவிகள் கலாஷேத்ரா கல்லூரி முன்பாக போராட்டம் நடத்தினர். இதையடுத்து முன்னாள் மாணவி ஒருவர் ஹரி பத்மன் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், உல்லாசத்துக்கு வீட்டுக்கு அழைத்ததாகவும், அவரது தொல்லை தாங்காமல் படிப்பை பாதியிலேயே நிறுத்தி விட்டதாகவும் அடையார் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். 

இதன் அடிப்படையில் பெண்கள் வன்கொடுமை தடுப்புச்சட்டம் உள்பட 3 கடுமையான சட்டப்பிரிவுகளின் கீழ் காவல் ஆய்வாளர் விஜயகுமாரி வழக்குப்பதிவு செய்தார். பின்னர் மாதவரத்தில் உள்ள தோழியின் வீட்டில் பதுங்கி இருந்த  ஹரிபத்மன் கைது செய்யப்பட்டார். இதையடுத்தது பாலியல் புகார் தொடர்பாக விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி கண்ணன், முன்னாள் டிஜிபி லத்திகா சரண் தலைமையில் 3 பேர் கொண்ட விசாரணைக் குழுவை தமிழ்நாடு அரசு  அமைத்துள்ளது. 

இந்நிலையில், பாலியல் புகார் தொடர்பாக கலாஷேத்ரா கல்லூரியில், இன்று மனித உரிமைகள் ஆணையத்தின் குழுவும் விசாரணை நடத்த உள்ளது. ஏற்கனவே மகளிர் ஆணையம் விசாரித்து வரும் நிலையில் மனித உரிமைகள் ஆணையமும் இன்று விசாரணையை தொடங்குகிறது.