கொடநாடு வழக்கு - கனகராஜின் சகோதரர் தனபாலுக்கு 5 நாட்கள் போலீஸ் காவல்...

கொடநாடு கொலை கொள்ளை வழக்கில்  கனகராஜின் சகோதரர் தனபால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க 5  நாட்கள் அனுமதி அளித்து மாவட்ட அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொடநாடு வழக்கு - கனகராஜின் சகோதரர் தனபாலுக்கு 5 நாட்கள் போலீஸ் காவல்...

கொடநாடு எஸ்டேட், கொலை, கொள்ளை வழக்கு கூடுதல் விசாரணை  மேற்கு மண்டல ஐ.ஜி. சுதாகர் மேற்பார்வையில் ஏ.டி.எஸ்பி. கிருஷ்ணமூர்த்தி தலைமையில் 5 தனிப் படைகள் அமைக்கப்பட்டு உதகையிலுள்ள பழைய மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

அரசு தரப்பு சாட்சிகள் குற்றம்சாட்டப்பட்டவர்கள் என அனைவரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கொடநாடு எஸ்டேட் கொள்ளை வழக்கிற்கு மூலகாரணமாக இருந்த கனகராஜ் வாகன விபத்தில் இறந்துள்ளார்.  

அந்த வழக்கையும் தனிப்படை போலீசார் சேலத்தில் விசாரணை மேற்கொண்டு வந்தனர். கொடநாடு கொள்ளை சம்பவம் நடைபெறும் முன்பே கனகராஜின் சகோதரர்  தனபால் மற்றும் உறவினரான ரமேசுக்கு தகவல் தெரிந்தும் காவல் துறையினரின் விசாரணையின் போது மறைத்து உள்ளனர்.

இதனால் சாட்சிகளை மறைத்தல், சாட்சிகளை அழித்தல், சாட்சி சொல்ல விடாமல் தடுத்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து தனி படை போலிசார் அக் 25 ந் தேதி  கைது செய்தனர். கனகராஜின் சகோதரர் தனபால் மற்றும் உறவினரான ரமேஷ் ஆகிய இருவரை சேலத்திலிருந்து கைது செய்து  நீலகிரி மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர்படுத்தினர் அவர்கள் இருவரையும் நவம்பர் 8 ந் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டதை தொடர்ந்து இருவரும் கூடலூர் கிளை  சிறையில் அடைக்கப்பட்டனர். 

இந்த நிலையில் அவர்கள் இருவரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க தனிப்படை போலீசார் உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் 26 ந் தேதி மனுதாக்கல் செய்த நிலையில் கனகராஜின் சகோதரர் தனபாலை மட்டும்  கூடலூர் கிளை சிறையிலிருந்து  தனிப்படை போலீசார்  உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

10 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதிகேட்ட நிலையில் 5 நாட்கள் மட்டும் விசாரணை நடத்த  நீதிபதி சஞ்சய் பாபா உத்தரவிட்டார்.  அதனை தொடர்ந்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை செய்ய தனிப்படை போலீசார் தனபாலை அழைத்து சென்றனர்.