போலி மனித வெடிகுண்டாக மாறி வங்கியை கொள்ளையடிக்க முயன்ற நபர் கைது!
தெலுங்கானாவில் வங்கிக்குள் புகுந்து இரண்டு லட்ச ரூபாய் கொடுக்க தவறினால் வெடிகுண்டை வெடிக்க செய்து விடுவேன் மிரட்டிய நபர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தெலுங்கானா மாநிலம் மேட்ச்சல் மாவட்டத்தில் உள்ள ஜீடிமெட்லா நகரில் ஆதர்ஷ் வங்கி என்ற பெயரிலான கூட்டுறவு வங்கி உள்ளது. நேற்று அந்த வங்கி வழக்கம்போல் செயல்பட்டு கொண்டிருந்தது. மதியத்திற்கு மேல் வங்கியில் ஊழியர்கள் வாடிக்கையாளர்கள் ஆகியோர் இருந்தனர்.
அப்போது அந்த வங்கிக்குள் புகுந்த நபர் ஒருவர் உடல் முழுக்க போலி வெடிகுண்டை கட்டி இருந்தார். சினிமாவில் காண்பிக்கப்படுவது போல திடீரென்று சட்டையை கழற்றி கருப்பு நிற பனியனில் எலக்ட்ரானிக் டிவைஸ்களும் ஒயர்களும் பொருத்தப்பட்ட போலி வெடிகுண்டை காண்பித்து தன்னை ஒரு மனித வெடிகுண்டு என அறிமுகப் படுத்திக்கொண்ட நபர், தனக்கு உடனடியாக இரண்டு லட்ச ரூபாய் பணம் தேவை எனக் கூறியுள்ளார். கொடுக்க தவறினால் வெடிக்க செய்து விடுவேன் என்றும் மிரட்டல் விடுத்துள்ளார்.
வங்கியில் இருந்த ஊழியர்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர். அப்போது சம்பந்தபட்ட வங்கிக்கு விரைந்த காவல்துறையினர் கொள்ளையருடன் பேச்சு வார்த்தை நடத்தினர். பின்பு அந்த கொள்ளையரை சமாதான படுத்திய போலீசார் அவரை கைது செய்தனர். பின்பு வெடிகுண்டை செயலிழக்க வைக்க முயன்ற போது தான் அது போலி வெடிகுண்டு என தெரிய வந்திருக்கிறது. கரும்பில் சிவப்பு நிற ஸ்டிக்கரை ஒட்டி சில ஒயர்களை அதனுடன் இணைத்து போலி வெடிகுண்டாக உருவாக்கி இருந்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.
பின்னர் அந்த கொள்ளையரை பற்றி விசாரணை செய்தபோது அவர் பெயர் சிவாஜி என்பதும் ஜீடிமெட்டிலா பகுதியை சேர்ந்த அவர் பல்வேறு நிறுவனங்களில் கிரேன் ஆபரேட்டராக வேலை செய்து தற்போது வேலை இழந்திருப்பதும் இதனால் பணம் இல்லாமல் அவதிப்பட்டு வருவதாகவும் தெரியவந்தது.
எனவே சுலபமாக பணம் சம்பாதிக்க முடிவு செய்து போலி மனித வெடிகுண்டாக மாறி வங்கியில் புகுந்து கொள்ளையடிக்க முயன்றது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.