புலனாய்வு துறையிடம் சிக்குவாரா உளவுத்துறை ஏடிஜிபி? அதிரடி மாற்றமும் அதன் பின்னணியும்!

புலனாய்வு துறையிடம் சிக்குவாரா உளவுத்துறை ஏடிஜிபி? அதிரடி மாற்றமும் அதன் பின்னணியும்!

உளவுத்துறை ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளதோடு பாேலிபாஸ்போர்ட்  வழக்கில் அவருக்கு தொடர்பு இருப்பதாகவும் அவர்மீது விரைவில் தேசிய புலனாய்வு துறை நடவடிக்கை எடுக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்நாட்டின் மிகுந்த அதிகாரம் கொண்ட பதவியாக பார்க்கப்படுவது  உளவுத்துறை ஏடிஜிபி பதவி. அப்படி பட்ட பதவியில் இருந்து திடீரென உளவுத்துறை ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் மாற்றப்பட்டிருக்கிறார்.  அவர் மாற்றப்பட்ட மறுநாளே போலி பாஸ்போர்ட் விவகாரம் அவர் மீது  உரிய நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம் அனுப்பியுள்ளது. இது தொடர்பாக தேசிய புலனாய்வு துறையும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. விரைவில் ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் மீது தேசிய புலனாய்வு துறை நடவடிக்கை எடுக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

பத்திரிக்கையாளர் வாராகி என்பவர் கடந்த மே மாதம் 24 ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் சிபிஐ, என்ஐஏ ஆகியவற்றிற்கு புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் மதுரை மாநகர காவல் ஆணையராகப் டேவிட்சன் பதவி வகித்து வந்த போது, ​​ வெளிநாட்டினருக்குப்  பாஸ்போர்ட் வழங்கியதில் முறைகேடு நடந்திருப்பதாக தெரிவித்துள்ளார். குறிப்பாக டேவிட்சன் ஜூன் 2018 முதல் ஜூலை 2020 வரை மதுரை நகரக் காவல் ஆணையராகப் பதவி வகித்த போது போலி ஆவணங்களைப் பயன்படுத்தி நூற்றுக்கணக்கான போலி பாஸ்போர்ட்டுகள் வழங்கப்பட்டன என குற்றம் சாட்டியுள்ளார். டிராவல் ஏஜென்சியை நடத்திக் கொண்டிருந்த அவரது மனைவி  ஜூனிதா டேவிட்சன் மூலம் இந்த முறைகேடு நடந்ததாக புகாரில் தெரிவித்துள்ளார். 

கடந்த 2019 ஆம் ஆண்டு ஜூன் மாதம் போலி ஆவணங்கள் மூலம் பாஸ்போர்ட் பெற்று சட்டவிரோதமாக இலங்கைக்கு செல்ல முயன்ற முத்துராமன் என்ற இலங்கை நாட்டவரை, குடியுரிமை அதிகாரிகள் கைது செய்தனர். கடந்த 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் போலி ஆவணங்கள் மூலம் போலி பாஸ்போர்ட் பெற்று  துபாய்க்கு செல்லவிருந்த பரமசிவம் என்ற மற்றொரு இலங்கை நாட்டவரையும் குடியுரிமை அதிகாரிகள் கைது செய்தனர். போலி பாஸ்போர்ட் விவகாரம் தொடர்பாக விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் மத்திய புலனாய்வு அமைப்பு ஏற்கனவே ஜூலை 2021 இல் ஒரு வழக்கை பதிவு செய்துள்ளது.

கடந்த ஆண்டு ஜனவரி மாதம் தேசிய புலனாய்வு அமைப்பு(NIA) சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம்(UAPA), பாஸ்போர்ட் சட்டம் மற்றும் வெளிநாட்டினர் சட்டம் ஆகியவற்றின் கீழ் இவ்வழக்குகளை பதிவு செய்துள்ளது. இதில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் போலி ஆவணங்களைப் பயன்படுத்தி போலி இந்திய பாஸ்போர்ட்களை உருவாக்கியது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. 

மதுரை உயர்நீதிமன்ற கிளையில் கடந்த 2021 ஆம் ஆண்டு போலி பாஸ்போர்ட் விவகாரம் தொடர்பாக தொடரபட்ட வழக்கில் மதுரை கியூ பிராஞ்ச் காவல் கண்காணிப்பாளருக்கு மூன்று மாதங்களுக்குள் விசாரணையை முடிக்குமாறு உத்தரவிடப்பட்டது. மேலும் விசாரணையை, கண்காணிக்கவும் எஸ்பிசிஐடி ஐஜிக்கு உத்தரவிட்டனர். இருப்பினும் இந்த வழக்கு முறையாக விசாரிக்கப்படவில்லை என்ன புகாரில் வராகித் தெரிவித்துள்ளார்.

இந்த புகார் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் தமிழக தலைமைச் செயலாளருக்கு கடிதம் அனுப்பி உள்ளது. அதில் ஏடிஜிபி டேவிட்சன் தேவ ஆசீர்வாதம் மீது அளிக்கப்பட்ட புகார் குறித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, நேற்று தமிழக அரசு மூன்று ஐபிஎஸ் அதிகாரிகளை மாற்றம் செய்து உத்தரவு பிறப்பித்தது. இதில் முக்கிய பதவியான தமிழக காவல்துறையின்  உளவுத்துறை பிரிவு ஏடிஜிபியாக இருந்த டேவிட்சன் தேவ ஆசீர்வாதத்தை, தலைமையக பொறுப்பிற்கு பணியிடம் மாற்றம் செய்யப்பட்டதன் காரணத்தினால் இந்த விவகாரம் மேலும் பரபரப்பை அதிகரித்துள்ளது.

இவ்வழக்கில் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ்  ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் மீது நடவடிக்கை எடுக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிக்க:சிதம்பரம் நடராசர் கோயில்; தொடரும் கனகசபை சர்ச்சை!