கட்டுக்கட்டாக பணம் கொள்ளை... குற்றவாளிகளுக்கு வலைவீச்சு!

சென்னையில் இரு வேறு இடங்களில் சுமார் 6 லட்ச பணத்தை கொள்ளையடித்து சென்ற நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.  

கட்டுக்கட்டாக பணம் கொள்ளை...  குற்றவாளிகளுக்கு வலைவீச்சு!

சென்னையில் இரு வேறு இடங்களில் சுமார் 6 லட்ச பணத்தை கொள்ளையடித்து சென்ற நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். 

சென்னை நெற்குன்றம் வள்ளியம்மாள் நகரை சேர்ந்தவர் திலிப் குமார்(53). இவருக்கு அவசர பணத்தேவை ஏற்பட்டதால் நேற்று மதுரவாயலில் உள்ள தனியார் வங்கிக்கு சென்று தங்க நகையை அடகு வைத்துவிட்டு அதன் மூலமாக கிடைத்த 4.50 லட்ச ரூபாய் பணத்தை இருசக்கர வாகனத்தில் வைத்து எடுத்து வந்துள்ளார். பின்னர் நெற்குன்றம் ரெட்டி தெரு அருகே தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு அருகிலிருந்த மதுபான கடைக்கு திலிப் குமார் சென்றார். மதுபானம் வாங்கிவிட்டு இருசக்கர வாகனத்தை எடுக்கும் போது அதில் வைத்திருந்த 4.50 லட்சம் பணம் காணாமல் போயிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே கோயம்பேடு காவல் நிலையத்தில் திலிப் குமார் புகார் அளித்தார்.

இதே போல் மாத்தூர் எம்.எம்.டி.ஏ பகுதியை சேர்ந்த பெரிய நாயகம் என்பவர் மஞ்சம்பாக்கத்தில் விஜயலட்சுமி டிரான்ஸ்போர்ட் என்ற நிறுவனத்தை சொந்தமாக வைத்து நடத்தி வருகிறார். நேற்று பிற்பகல் மணலியில் உள்ள தனியார் வங்கியிலிருந்து 1.50 லட்சம் எடுத்து கொண்டு   மாதவரம் பால்பண்ணை அருகே இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு தபால் நிலையம் சென்றார். பின்னர் வேலையை முடித்துவிட்டு இருசக்கர வாகனத்தை எடுக்கும்போது அதில் வைத்திருந்த 1.50 லட்சம் பணம் காணாமல் போயுள்ளது. இது குறித்து பெரிய நாயகம் கொடுங்கையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில்  இரு காவல் நிலைய போலீசார் அங்குள்ள சி.சி.டி.வி காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.