13 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு... இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது...

விராலிமலையில் 13 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த 29 வயது இளைஞரை கைது செய்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து சிறையில் அடைத்தனர்.

13 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு... இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது...
விராலிமலையைச் சேர்ந்த13 வயது சிறுமி எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். சிறுமியின் தந்தை வெளியூரில் வேலை செய்து வருகிறார்.  இன்று காலை சிறுமி மற்றும் அவரின் அண்ணன் மட்டுமே வீட்டில் இருந்துள்ளனர். அண்ணன் சிறிது நேரத்தில் கடைத்தெருவிற்கு சென்று விட சிறுமி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இந்த நிலையில் ஹோட்டல் தொழிலாளியான திருச்சி சமயபுரத்தைச் சேர்ந்த 29 வயதான இளைஞர் மாதவன் என்பவர் சிறுமி வீடு இருக்கும் தெரு வழியாகச் செல்லும் போது சிறுமி தனியாக இருப்பதை பார்த்து வீட்டிற்குள் சென்று கதவை மூடி சிறுமியிடம் பாலியல் வன்முறை செய்துள்ளார். கடைக்கு சென்ற அண்ணன் வீட்டிற்கு திரும்பி வந்து பார்க்கும் போது வீட்டின் கதவுகள் அடைக்கப்பட்டு இருந்ததையும் வீட்டிற்குள் இருந்து சிறுமியின் அலறல் சத்தம் கேட்பதையும் அறிந்து ஜன்னல் வழியே எட்டிப் பார்த்து உள்ளார். அப்போது கதவு தாளிடப்பட்டு இருந்திருக்கிறது 
 
சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு உள்ளது. அசம்பாவிதத்தை உணர்ந்த சிறுமியின் அண்ணன் ஓடிச்சென்று அக்கம் பக்கம் உள்ளவர்களிடம் தகவலைக் கூறியதைக் தொடர்ந்து பக்கத்து வீட்டாரின் உதவியுடன் இரண்டு கதவுகளையும் உடைத்து சிறுமியை சிறிய காயங்களுடன் மீட்டு உள்ளனர். இதனைத் தொடர்ந்து காவல் நிலையத்திற்கு அளிக்கப்பட்ட தகவலையடுத்து நிகழ்விடம் சென்ற போலீசார் மாதவனை கைதுசெய்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு விராலிமலை அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.