முன்விரோதம்- வீடு புகுந்து இளைஞர் வெட்டிக்கொலை

சென்னை அருகே இளைஞரை வீடு புகுந்து வெட்டி படுகொலை செய்த 9 பேரை மடிப்பாக்கம் போலீசார் 24 மணி நேரத்திற்குள் கைது செய்தனர்.

முன்விரோதம்- வீடு புகுந்து இளைஞர் வெட்டிக்கொலை

சென்னை மடிப்பாக்கம் அடுத்த மூவரசம்பேட்டை சபாபதி நகர் பகுதியை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவர் மீது கஞ்சா விற்பனை, கொலை,அடிதடி போன்ற பல வழக்குகள்   நிலுவையில் உள்ளன. இந்தநிலையில் பழைய வழக்கு சம்பந்தமாக ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜராகி  விட்டு வீடு திரும்பிய ராமச்சந்திரனை பின்தொடர்ந்து வந்த 9 பேர் கொண்ட மர்ம கும்பல் அவரை சரமாரியாக வெட்டி படுகொலை  செய்து விட்டு கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பி சென்றனர்.

தகவல் அறிந்து வந்த மடிப்பாக்கம்  போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தநிலையில், கொலை செய்த குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தனர். இதற்கிடையில் குற்றவாளிகள் 9 பேரும் மூவரசம்பேட்டை ஏரியின் அருகில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு வந்த தகவலையடுத்து, அங்கு சென்ற காவல்துறையினர் அவர்களை அனைவரையும் கைது செய்தனர்.

மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த போலீசார், குற்றவாளிகளிடம் விசாரித்தனர். அதில் முன்விரோதம் காரணமாக பழிக்கு பழி வாங்கவே கொலை செய்ததாக குற்றவாளிகள் வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்தனர்.