புதுச்சேரி: டூவீலர் பெட்டியில் இருந்து 50 ஆயிரம் ரூபாய் பணம் திருட்டு.. சிசிடிவி காட்சிகள் மூலம் போலீசார் தீவிர விசாரணை
புதுச்சேரியில் இருசக்கர வாகன பெட்டியில் இருந்து 50 ஆயிரம் ரூபாய் பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை சிசிடிவி காட்சிகள் கொண்டு போலிசார் தேடி வருகின்றனர்.
புதுச்சேரி பணித்திட்டு பகுதியை சேர்ந்தவர் அய்யனாரப்பன். இவர் வெளிநாட்டில் பணி புரிந்து வருகிறார். இவரது மனைவி தமிழரசி (35), புதுச்சேரி பணித்திட்டு பகுதியில் தனது குழந்தைகள் உடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில் தமிழரசி குடும்ப செலவுக்காக தனது நகையை கிருமாம்பாக்கம் பகுதியில் உள்ள ஒரு அடமான கடையில் அடகு வைத்துள்ளார். இதனை மீட்பதற்காக தனது இருசக்கர வாகனத்தில் கடலூர் புதுச்சேரி சாலையில் உள்ள ஒரு வங்கிக்கு சென்று 1 லட்சம் ரூபாய் பணம் எடுத்துள்ளார்.
அதனை வண்டியின் பெட்டியில் வைத்துள்ளார். பின்னர் தனது வாகனத்திலிருந்து 50 ஆயிரம் மட்டும் எடுத்து கொண்டு அடகு கடைக்கு சென்று தனது நகைகளை மீட்டு விட்டு வந்து பார்த்த போது வாகனத்தின் பெட்டி திறந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இந்த திருட்டு குறித்து கிருமாம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவர் அளித்த புகாரின் பேரில் போலிசார் வழக்கு பதிவு செய்தனர்.
மேலும் கடையில் பெருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமிரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், முதலில் இரண்டு வாலிபர்கள் தமிழரசியை பின் தொடர்ந்து வருவதும் அவர் கடைக்குள் சென்ற பிறகு ஒருவர் ஹெல்மட் மாட்டி கொண்டு இருசக்கர வாகனத்தில் வந்து தமிழரிசியின் வாகனத்தின் பக்கத்தில் நிற்பதும்,
அடுத்து மூன்று வாலிபர்கள் அடகு கடையின் வாசலில் தமிழரசிக்கு வெளியில் நடப்பது தெரியாமல் இருக்கும் படி மறைத்து நின்ரவாறு இருக்கும் போது, முதலில் வந்த இருவர் இருசக்கர வாகனத்தின் பெட்டியை உடைத்து பணத்தை எடுத்து செல்வதும் பதிவாகி இருந்தது.
இதனை தொடர்ந்து சிசிடிவி கேமிராவில் பதிவான காட்சிகளை கொண்டு பணம் திருடி சென்ற மர்ம நபர்களை போலிசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.