நடிகர் ரூசோவிடமிருந்து ரூ.15 கோடி வாங்கிய ஆர்.கே. சுரேஷ்...ஆருத்ரா மோசடி வழக்கின் குற்றப்பத்திரிகை தாக்கல்!

நடிகர் ரூசோவிடமிருந்து ரூ.15 கோடி வாங்கிய ஆர்.கே. சுரேஷ்...ஆருத்ரா மோசடி வழக்கின் குற்றப்பத்திரிகை தாக்கல்!

ஆருத்ரா நிதி நிறுவன மோசடியில் நடிகர் ரூசோவிடமிருந்து 15 கோடி ரூபாயை ஆர்.கே.சுரேஷ் பெற்றுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. 

சென்னை அமைந்தகரையை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வந்த ஆருத்ரா கோல்டு நிறுவனம், முதலீடு செய்யும் பணத்திற்கு 25 முதல் 30 சதவீதம் வரை வட்டி எனக் கூறி சுமார் 1 லட்சம் முதலீட்டாளர்களிடம் இருந்து, ரூ.2,438 கோடி மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இந்த மோசடி தொடர்பாக அளிக்கப்பட்ட புகார்களின் அடிப்படையில் பொருளாதார குற்றத்தடுப்புப் பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, அந்த நிறுவனத்தின் இயக்குநர்கள் உட்பட 21 பேரை குற்றவாளிகளாக சேர்த்தனர்.

இவ்வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்ட நடிகர் ரூசோவிடம் போலீசார் நடத்திய விசாரணையில், பிரபல நடிகரும், தயாரிப்பாளரும் பாஜக பிரமுகருமான ஆர்.கே.சுரேஷுக்கு ஆருத்ரா மோசடியில் தொடர்பிருப்பதாக தெரிய வந்தது. அதேபோல அண்மையில் கைது செய்யப்பட்ட பாஜக நிர்வாகி ஹரீஷையும் 4 நாட்கள் காவலில் எடுத்து போலீசார் நடத்திய விசாரணையிலும், ஆருத்ரா மோசடியில் நடிகர் ஆர்.கே. சுரேஷின் தொடர்பு குறித்த பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் கடந்த இருபதாம் தேதி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் ஆருத்ரா வழக்கு தொடர்பான குற்றப்பத்திரிகையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.

இதையும் படிக்க : ”சிறு, குறு நடுத்தர தொழில்களுக்கு தனி கொள்கை வகுத்தவர் கருணாநிதி" முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!

இந்த வழக்கில் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், முதல் கட்ட குற்ற பத்திரிக்கையை போலீசார் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர். அதில், நடிகர் ரூசோவிடமிருந்து ஆர்.கே. சுரேஷ்க்கு 15 கோடி பண பரிவர்த்தனை செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.