சென்னையில் ரவுடி கும்பல் மோதல் அதிகரிப்பு... பிரபல ரவுடிகள் உட்பட 4 பேருக்கு போலீசார் வலைவீச்சு...

சென்னையில் வளர்ந்து வரும் ரவுடி மீது நாட்டு வெடிகுண்டு வீசி கொல்ல முயன்ற பிரபல ரவுடி கும்பலை, போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

சென்னையில் ரவுடி கும்பல் மோதல் அதிகரிப்பு... பிரபல ரவுடிகள் உட்பட 4 பேருக்கு போலீசார் வலைவீச்சு...

சென்னை கே.கே.நகர் பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடி புறா மணி, முன்பகை காரணமாக கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். அப்போது சிறையில் இருந்த அவரது எதிரி தக்காளி பிரபா என்பவருக்காக, ஆனந்தன் என்கிற கோழி பாபு உள்ளிட்ட 6 பேர் கொண்ட கும்பல், புறா மணியை திட்டமிட்டு கொலை செய்ததாக கூறப்படுகிறது. புறா மணியின் மறைவுக்குப் பிறகு, புதிய ரவுடியாக வலம் வரும் அவரது இளைய சகோதரர் சுமன் மீது, விருகம்பாக்கம், கே.கே.நகர், மதுரவாயல் உள்ளிட்ட பகுதிகளில் குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.  

இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு, புறா மணியின் நினைவு நாளன்று, சுமன் ரவுடி தக்காளி பிரபாவை கொல்ல முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த தக்காளி பிரபா தனது கூட்டாளிகளுடன் சென்று, சுமனின் வீட்டின் மீது நாட்டு வெடிகுண்டு வீசியுள்ளார். இதில் வீட்டின் ஜன்னல் மற்றும் கதவுகள் சேதமடைந்த நிலையில், வீட்டின் பின்புறம் குளித்துக் கொண்டிருந்த சுமன், அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார். வீட்டின் பின் வாசல் வழியே தப்பிச் சென்ற அவர், ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தார். இதனையடுத்து, சுமனை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்த போலீசார், ரவுடி தக்காளி பிரபாவின் உறவினர்கள் இருவரைப் பிடித்து, தக்காளி பிரபா மற்றும் கூட்டாளிகளின் மறைவிடம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.