மிளகாய் பொடி தூவி மாமனாரை கொலை செய்ய முயன்ற மருமகன்...

மதுரையில் மாமனார் மீது மிளகாய்ப் பொடியை தூவி, மருமகன் கொலை செய்ய முயற்சிக்கும் காட்சி, சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மிளகாய் பொடி தூவி மாமனாரை கொலை செய்ய முயன்ற மருமகன்...

மதுரை கருப்பாயூரணியை சேர்ந்தவர் ராஜபாண்டி. இவர் தனது மகளை, சொந்த தங்கை மகனான முத்துமணிக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து வைத்துள்ளார். இந்நிலையில், கணவன்-மனைவி இடையே அடிக்கடி ஏற்பட்ட தகராறு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்வதாக கூறப்படுகிறது. இதனிடையே தனது மனைவியை தன்னுடன் சேர்த்து வைக்குமாறு முத்துமணி பலமுறை மாமனார் ராஜபாண்டியிடம் கேட்டும், மகள் விரும்பாததால் சேர்த்து வைக்க மறுத்துள்ளார். மேலும், தன்னையும், தன் மகளையும்  தொந்தரவு செய்யாதே என்றும் முத்துமணியை எச்சரித்து அனுப்பியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், தன்னுடைய மகள் அரசு வேலைக்கு தேர்வாகியுள்ளதால், அவருக்கு மறுமணம் செய்து வைக்க ராஜபாண்டி முடிவு செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த முத்துமணி, மாமனாரை மதுரை காமராஜர் சாலை சந்திப்பில் வழிமறித்து அரிவாளால் வெட்டியுள்ளார். அவர் தப்பிக்க முடியாதபடி, ஹெல்மெட் போட்டிருந்த மற்றொரு நபர் மிளகாய் பொடி தூவி தாக்கியுள்ளார்..

இதனையடுத்து, காயமடைந்த ராஜபாண்டியை அக்கம் பக்கத்தினர் மீட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மதுரையின் முக்கிய சாலையில் நிகழ்ந்த கொடூர தாக்குதல் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த காட்சியை அங்கிருந்தவர்கள் செல்போனில் படம் பிடித்து இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர். மேலும், இந்த காட்சி அங்குள்ள சிசிடிவி கேமராவிலும் பதிவாகியுள்ளது. இந்நிலையில், தப்பியோடிய முத்துமணியை காவலர் ஒருவர் விரட்டி பிடித்து விசாரித்து வருகிறார்.