இன்ஸ்டாகிராமில் தொடரும் லீலை... இளம்பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக ‘மார்பிங்’ செய்த சிறுவன்.. கிருஷ்ணகிரியில் பரபரப்பு

சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் இளம்பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக பதிவிட்ட சிறுவனை சைபர் கிரைம் போலீசார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இன்ஸ்டாகிராமில் தொடரும் லீலை... இளம்பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக ‘மார்பிங்’ செய்த சிறுவன்.. கிருஷ்ணகிரியில் பரபரப்பு

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை சேர்ந்தவர் 21 வயது இளம்பெண் சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம்மை பயன்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், அதே பகுதியை சேர்ந்த 18 வயது சிறுவன் அந்த இளம்பெண்ணின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து அந்த பெண்ணின் புகைப்படத்தை  டவுன்லோடு செய்துள்ளான்.

பின்னர், போலியாக ஒரு இன்ஸ்டாகிராம் கணக்கை தொடங்கி, அந்த கணக்கின் புரொபைல் போட்டோவாக அந்த இளம்பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக ‘மார்பிங்’ செய்து அந்த சிறுவன் வைத்துள்ளான். மேலும், அந்த இளம்பெண் குறித்து ஆபாசமான வரிகளையும் பதிவிட்டுள்ளான்.

இந்த சம்பவம் குறித்து அறிந்த அந்த இளம்பெண் சம்பந்தப்பட்ட சிறுவனிடம் இது குறித்து கேட்டுள்ளார். அப்போது அந்த சிறுவன், இளம்பெண்ணை மிரட்டியதுடன் ஆபாச வீடியோ குழுக்களில் உனது புகைப்படங்களை வெளியிட்டு விடுவேன் என்று மிரட்டி உள்ளான்.

உடனே, அந்த இளம்பெண் கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் செய்ததை தொடர்ந்து, சம்பந்தப்பட்ட சிறுவனை போலீசார் கைது செய்தனர். அவர் மீது கொலை மிரட்டல், தகவல் தொழில் நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து, கைதான சிறுவன் இதேபோல வேறு பெண்களின் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் இருந்து பதிவிறக்கம் செய்து, ஆபாசமாக சித்தரித்து வெளியிட்டுள்ளாரா? அல்லது அவர்களை மிரட்டி உள்ளாரா? என பல்வேறு கோணங்களில் கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும், 18 வயது சிறுவன் தகவல் தொழில் நுட்பத்தை தவறாக பயன்படுத்தி பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக இணையத்தில் பதிவிட்டது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.