நடைபயிற்சி சென்ற நீதிபதியை ஆட்டோ ரிக்ஷா ஏற்றி கொலை செய்த கொடூரம்…

ஜார்க்கண்டில், மாவட்ட நீதிபதி ஒருவர், ஆட்டோ ரிக்ஷா ஏற்றி கொல்லப்பட்ட சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

நடைபயிற்சி சென்ற நீதிபதியை ஆட்டோ ரிக்ஷா ஏற்றி கொலை செய்த கொடூரம்…

ஜார்க்கண்ட் மாநிலம் தான்பாத் மாவட்ட தலைமை நீதிபதியாக இருப்பவர் உத்தம் ஆனந்த். இவர் நேற்று காலை நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது பின்னால் வந்த ஆட்டோ ரிக்ஷா ஒன்று அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது.இதனால் பலத்த காயமடைந்த நீதிபதி சாலையில் கிடந்தார். அந்த வழியாக வந்த ஒருவர் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

 இதனிடையே, நடைபயிற்சிக்கு சென்ற உத்தம் ஆனந்த் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால், அவரது குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தனர். இதனையடுத்து குடும்பத்தினரை மருத்துவமனைக்கு அழைத்து சென்று அடையாளம் காட்டி உள்ளனர்.இந்த சம்பவம் தொடர்பாக ரிக்ஷாவில் இருந்த லகன் குமார் வர்மா மற்றும் ராகுல் வர்மா ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 இந்த நிலையில் தங்களது குற்றத்தை இருவரும் ஒப்பு கொண்டனர். கொலை சம்பவம் சாலையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது. அந்த காட்சிகள் மூலம் பின்னால் வந்தவர்கள், வேண்டுமென்றே, நீதிபதி மீது மோதியது தெரிய வந்துள்ளதாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.இந்த வழக்கை, விபத்தில் இருந்து கொலை வழக்காக மாற்றுவதற்கு போலீசார் காலதாமதம் செய்ததாக உத்தம் ஆனந்த் குடும்பத்தினர் குற்றம்சாட்டி உள்ளனர்.

 உத்தம் ஆனந்த் கொலை செய்யப்பட்டற்கு கவலை தெரிவித்துள்ள ஜார்க்கண்ட் உயர்நீதிமன்ற நீதிபதி ரவி ரஞ்சன், வழக்குப்பதிவு செய்வதில் போலீசார் காலதாமதம் செய்ததற்கு அதிருப்தி தெரிவித்தனர்.இதனை வேண்டுமென்றே செய்தது தெரியவந்தால், வழக்கு விசாரணை சி.பி.ஐ.,க்கு மாற்றப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.இதனிடையே, இந்த கொலை சம்பவம் தொடர்பாக உச்சநீதிமன்ற நீதிபதி ரமணா கவனத்திற்கு பார் வழக்கறிஞர் சங்கம் கொண்டு சென்றது.அப்போது பேசிய தலைமை நீதிபதி  இந்த விவகாரம் தொடர்பாக ஜார்க்கண்ட் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியுடன் பேசியுள்ளேன். வழக்கு விசாரணை உயர்நீதிமன்றத்தில் உள்ளது. இந்த விவகாரம் கவனத்தில் கொள்ளப்படும் என தெரிவிதத்தார்.