பத்திரிகையாளரை தாக்கிய திமுகவினர்... திருக்கோவிலூர் அருகே பரபரப்பு...

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே பத்திரிகையாளரை திமுகவினர் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பத்திரிகையாளரை தாக்கிய திமுகவினர்... திருக்கோவிலூர் அருகே பரபரப்பு...

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த கீழத்தாழனூர் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நேற்று காலை 7 மணிக்கு தொடங்கிய  வாக்குப்பதிவு மாலை 5 மணிக்கு முடிந்தது.

இந்த நிலையில், தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, கொரோனா நோயாளிகளுக்கு மட்டுமே 5 மணி முதல் 6 மணி வரை கூடுதலாக ஒரு மணி நேரம் ஒதுக்கி வாக்குப் பதிவு செய்ய அனுமதி அளித்தது. இந்த நிலையில், 5 மணிக்கு மேல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு வந்த திமுகவினர், பாதுகாப்பு பணியில் இருந்த ஆய்வாளருடன் வாக்களிக்க வேண்டும் என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதற்கு அனுமதி அளிக்காததை அடுத்து போலீசாருடன் திமுகவினர் பள்ளி வளாகத்தின் முன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் தொகுதி திமுக தேர்தல் பொறுப்பாளர் வந்தவாசி சட்டமன்ற உறுப்பினர் அம்பேத்குமார் சம்பவ இடத்திற்கு வந்து போலிசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனை அடுத்து அங்கு வந்த ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயனை கண்டதும் அப்பகுதியில் 500க்கும் மேற்பட்ட திமுகவினர் குவிந்தனர். இரண்டு சட்டமன்ற உறுப்பினர்களும் போலீசாருடன் பேச்சுவார்த்தை நடத்தியபோது அங்கிருந்த செய்தியாளர் ஒருவர் செய்தி சேகரிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.  

இதனை கண்ட திமுகவினர் சிலர் செய்தியாளரின் செல்போனை பிடுங்கி அவரை தாக்கியுள்ளனர். இதை கண்ட போலீசார் செய்தியாளரை அங்கிருந்து பாதுகாப்பாக அப்புறப்படுத்தினர். இதனையடுத்து சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் திமுகாவினரை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இதனால் அப்பகுதியில், நான்கு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்து வந்த பதற்றம் குறைந்தது.  செய்தியாளரை திமுகவினர் தாக்கிய சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.