தங்கையின் குரல்வளையை நெரித்து கொன்ற அண்ணன்... ஆணவக் கொலையா என போலீசார் விசாரணை...

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் காதல் விவகாரத்தில் தொலைபேசியில் பேசிய தங்கையை அண்ணனே கொலை செய்த சம்பவம் பழனி பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தங்கையின் குரல்வளையை நெரித்து கொன்ற அண்ணன்... ஆணவக் கொலையா என போலீசார் விசாரணை...

பழனி கணபதி நகரை சேர்ந்தவர் முருகேசன். கூலித் தொழிலாளியான இவருக்கு சங்கிலியம்மாள் என்ற மாற்றுத்திறனாளி மனைவியும், கார்த்தி என்ற மகனும் காயத்ரி மகளும் உள்ளனர். முருகேசன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்தநிலையில் மகன் கார்த்தி கட்டிவேலைக்கு சென்று குடும்பத்தை நடத்திவந்த நிலையில்  நேற்று இரவு முருகேசனின்  மகள் காயத்ரி (16) என்பவர் படுகாயங்களுடன் பழனி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது மருத்துவர்கள் பரிசோதனையில் காயத்ரியின் குரல்வளை நெறிக்கப்பட்டு உடைந்திருப்பது தெரியவந்தது. மேலும் சிகிச்சை பலனின்றி சிறுமி காயத்ரி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவலறிந்து வந்த பழனி நகர காவல் துறையினர் நடத்திய விசாரணையில், சிறுமி காயத்ரி கடந்தசில நாட்களாக தொலைபேசியில் ஒருவருடன் பேசி பழகி வந்ததாகவும், இதுகுறித்து பலமுறை எச்சரித்தும் கேட்காமல் பேசிப் பழகி வந்துள்ளார். இந்நிலையில் இன்று காயத்ரியின் பெரியம்மா மகன் பாலமுருகன் என்பவர் காயத்ரியின் வீட்டிற்கு சென்றபோது காயத்ரி தனியாக இருந்தபடி தொலைபேசியில் நீண்ட நேரமாக பேசிக் கொண்டிருப்பதை பார்த்து பாலமுருகன் காயத்ரியை மிரட்டியுள்ளார். 

இதில் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டதில் ஆவேசமடைந்த பாலமுருகன் காயத்ரியை கடுமையாகத் தாக்கி அவரது குரல்வளையை நெறித்துள்ளார். இதில் மயக்கமடைந்த காயத்ரியை பழனி அரசு மருத்துவமனைக்கு கொண்டுவந்து பாலமுருகன் சிகிச்சைக்காக அனுமதித்ததும், இது சிகிச்சை பலனின்றி காயத்ரி இறந்ததும் தெரியவந்தது. இந்நிலையில் தற்போது பழனி நகர போலீசார் பாலமுருகனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் காயத்ரியை தாக்கும் பொழுது பாலமுருகன் மட்டும் இருந்தாரா அல்லது அவரது குடும்பத்தினரும் உடன் இருந்தனரா? சம்பவம் நடக்கும் போது காயத்ரியின் குடும்பத்தினர் எங்கு சென்றிருந்தனர்?  காயத்ரியை திட்டமிட்டு ஆணவக்கொலை செய்தனரா? காயத்ரி தொலைபேசியில் பேசி பழகிய நபர் யார்? என்ற கோணத்திலும் பழனி நகர போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.