வறுமையால் திருடிய பணிப்பெண்; மன்னித்து மீண்டும் பணியில் சேர்த்த நடிகை!

வறுமையால் திருடிய பணிப்பெண்; மன்னித்து மீண்டும் பணியில் சேர்த்த நடிகை!

நடிகை ஷோபனா வீட்டில் பணத்தை  திருடிய வேலைக்கார பெண்ணிடம் போலீஸ் விசாரணை நடத்திய நிலையில், வறுமையால் திருடியதாக ஒப்புக்கொண்டதால் மீண்டும் அவரை பணியில் நடிகை ஷோபனா சேர்த்து கொண்டுள்ளார்.

பிரபல நடிகை ஷோபனா சென்னை தேனாம்பேட்டை சீனிவாசா சாலையில் தனது தாயாருடன் வசித்து வருகிறார். பரதநாட்டிய கலைஞரான ஷோபனா, நடிகர் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த் உள்ளிட்ட பிரபலங்களுடன் பல்வேறு திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து புகழ் பெற்றவர்.

 மூன்று அடுக்குக்கொண்ட இவரது வீட்டின் முதல் தளத்தில தாயார் ஆனந்தம்,வசித்து வருகிறார். இரண்டாம் தளத்தில் நடிகை ஷோபனா வசித்து வருகின்றனர். தரைதளத்தில் பரத நாட்டிய பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் நடிகை ஷோபனா வீட்டில் கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோயிலை சேர்ந்த விஜயா என்கிற பெண் கடந்த ஒரு வருடமாக வீட்டில் தங்கி அவரது தாயாரை கவனித்து வந்துள்ளார்.  இந்த நிலையில் கடந்த சில நாட்களாக தாயார் ஆனந்தம் வீட்டில் வைத்திருந்த பணம் சிறுக சிறுக காணாமல் போயுள்ளது. இதனால் நடிகை ஷோபனா தனது வீட்டு பணிப்பெண் விஜயா மீது சந்தேகம் இருப்பதாக கூறி தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் செல்போன் மூலம் புகார் அளித்துள்ளார்.

புகாரின் பேரில் தேனாம்பேட்டை போலீஸார் நடிகை ஷோபனா வீட்டிற்கு சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர்.  விசாரணையில் பணிப்பெண் விஜயா, கடந்த மார்ச் மாதம் முதல் ஜூன் மாதம் வரை சிறுக, சிறுக 41 ஆயிரம் ரூபாய் வரை பணம் திருடியது தெரியவந்தது.

விஜயா சோபனா வீட்டில் திருடிய பணத்தை கார் ஓட்டுநர் முருகன் என்பவரிடம் கொடுத்து அவரது ஜிபே மூலமாக ஊரில் உள்ள மகளுக்கு அனுப்பியது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.  மேலும் வறுமையின் காரணமாக பணத்தை திருடியதாக, குற்றத்தை ஒப்புக்கொண்டு மன்னிப்பு கேட்டதால் நடிகை ஷோபனா புகாரை வாபஸ் பெற்றுக்கொண்டு, பணிப்பெண்ணை மன்னித்து மீண்டும் தொடர்ந்து வீட்டில் பணி செய்ய ஒப்புக்கொண்டுள்ளார்.  நடிகை ஷோபனா பணிப்பெண் திருடிய பணத்தை சம்பள பணத்திலிருந்து பிடித்தம் செய்து கொள்வதாக அவரிடம் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க:ஆங்கில கால்வாயை நீந்தி கடந்த தமிழ்நாட்டு மாணவன்!