கந்து வட்டிக் கொடுமை; குடும்பத்தை சிறைபிடித்த ரவுடி கும்பல்!

திண்டுக்கல்லில்  வட்டி பணத்திற்காக இரண்டு குழந்தைகள் உட்பட ஐந்து நபர்களை ரவுடி கும்பல் அவர்களது வீட்டிற்குள் புகுந்து  சிறை பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

திண்டுக்கல்லில் திண்ணப்பன் என்பவர் கடந்த 40 ஆண்டுகளாக ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். கடந்த 12 ஆண்டுகளாக காரைக்குடியை சேர்ந்த ராஜா கருப்பையா என்பவரிடம்  ரியல் எஸ்டேட் தொழிலுக்காக கடன் வாங்கி வந்துள்ளார். 

இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திண்ணப்பன் ரூபாய் 4 கோடி ரூபாய் கடன் பெற்றிருந்ததாக கூறப்படுகிறது. வாங்கிய நான்கு கோடி கடன் தொகையில் 2 கோடி ரூபாய் திருப்பி செலுத்திய நிலையில் கூடுதலாக பல கோடி ரூபாய் வட்டியும் செலுத்தியதாக தெரிகிறது.  இந்நிலையில் மீதமுள்ள 2 கோடி ரூபாய்க்கு சொத்து அடமான பத்திரம் கொடுக்கப்பட்டதாகவும், அசல் பணம் 2 கோடி மற்றும் அதற்குரிய வட்டி நான்கு கோடி ரூபாய் ஆகியவற்றை ராஜா கருப்பையா கேட்டுள்ளார். வட்டித்தொகை அசலையும் கடந்து சென்றாதால் திண்ணப்பன் அதை தர மருத்ததாக கூறப்படுகிறது.  


இதனால் இராஜா கருப்பையா அவரது கூட்டாளிகள் ரவி, சரவணன் ஆகியோரை திண்ணப்பனின் வீட்டிற்கு கடந்த 17ஆம் தேதி அனுப்பி வைத்துள்ளார். அந்த நபர்கள் இருவரும் திண்ணப்பன் வீட்டில் இருந்த  இரண்டு குழந்தைகள் மற்றும் இரண்டு பெண்கள் உட்பட ஐந்து பேரை வீட்டிற்குள்ளேயே சிறை  வைத்துள்ளனர். இரண்டு நாட்களாக வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாத நிலையில் நேற்று இரவு உறவினர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். திண்ணப்பனின் உறவினர்கள் திண்டுக்கல் காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரனின் முகாம் அலுவலகத்திற்கு சென்று புகார் தெரிவித்துள்ளனர். 

உடனடியாக திண்ணப்பன் வீட்டிற்கு விரைந்த காவல்துறையினர். அங்கு திண்ணப்பன் வீட்டாரை சிறைபிடித்து வைத்திருந்த ரவி, சரவணன் ஆகியோரை கைது செய்து வீட்டில் சிறைபிடித்து வைக்கப்பட்டிருந்த குழந்தைகள் மற்றும் பெரியவர்களை மீட்டனர். 

ரவி மற்றும் சரவணன் வீட்டிலிருந்த இரண்டு நாட்களில் திண்ணப்பனின் குடும்பத்தினரை தகாத வார்த்தைகளால் பேசியும், வீட்டிலிருந்த பணம் நகை உள்ளிட்ட பொருட்கள், கார் உட்பட அபகரித்து சென்றுள்ளதாகவும் புகாரில் தெரிவித்துள்ளனர். மேலும் உயிர் உடைமைகளுக்கு பாதுகாப்பு இல்லாத நிலையில் தங்களது ஆவணங்களை பெற்று தர வேண்டும் என தமிழக அரசிற்கும் காவல்துறைக்கும் திண்ணப்பன் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். கந்து வட்டி தராததால் மூன்று நாட்கள் ஒரு குடும்பத்தையே ரவுடி கும்பல் அவர்களது வீட்டிற்குள்ளேயே சிறை வைத்த சம்பவம் திண்டுக்கல்லில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிக்க: பங்காரு அடிகளார் மறைவு; அண்ணாமலை பாதயாத்திரை ரத்து!