ஆசை வார்த்தை காட்டி 23 பேருக்கு டிமிக்கி கொடுத்த அமுதா.!!

பங்குச்சந்தையில் முதலீடு செய்தால் லாபம் கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறி, 23 நபர்களிடம் 87 லட்சம் ரூபாய் மோசடி செய்த பெண்ணை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

ஆசை வார்த்தை காட்டி 23 பேருக்கு டிமிக்கி கொடுத்த அமுதா.!!

சென்னை நுங்கம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் பப்பியான் பிரபாகர். அடையாறு பகுதியில் செல்போன்  கடை நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. அண்மையில் இவரிடம் அமுதா என்ற பெண் அறிமுகமாகி, தான் தி.நகரில் உள்ள பிரபல வர்த்தக நிறுவனத்தில் நிர்வாக அதிகாரியின் உதவியாளராக வேலை செய்வதாக கூறியுள்ளார். மேலும் பங்குசந்தையில் முதலீடு செய்தால் அதிகம் லாபம் கிடைக்கும் என ஆசைவார்த்தை கூறியதாகவும் தெரிகிறது.  இதனை நம்பிய பப்பியான், அவரது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் என 23 பேரை பங்கு சந்தையில் முதலீடு செய்ய வலியுறுத்தி சுமார் 87 லட்சம் ரூபாயை அமுதாவிடம் வழங்கியுள்ளார்.  

இந்தநிலையில் அமுதா, அப்பணத்தை முதலீடு செய்யாமல் சொந்த தேவைக்கு பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனிடையே பங்குசந்தையில் எந்தவித லாபமும் கிடைக்காததால் பப்பியான் இதுகுறித்து அமுதாவிடம் கேட்டுள்ளார். எந்த கேள்விக்கும் சரிவர பதிலளிக்காத அமுதாவை பார்த்தபோது  தாம் ஏமாற்றப்பட்டது தெரியவரவே, பப்பியான்  சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் அளித்தார். 

அதன்பேரில் 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிந்து ஓராண்டுக்கும் மேலாக தலைமறைவாக இருந்த அமுதாவை, மதுரையில் கைது செய்தனர். மேலும் ,விசாரணையின் போது  23 நபர்களிடம், வங்கி கணக்கு மூலம் 53 லட்ச ரூபாயும், ரொக்கமாக 34 லட்சம் ரூபாய் என மொத்தம் 87 லட்சத்து 25 ஆயிரத்து 499 ரூபாய் மோசடி செய்தது தெரியவந்தது.