பேருந்தின் கூரை மீது பயணம்...! மாணவர்களுக்கு நூதன தண்டனை வழங்கிய உயர் நீதிமன்றம்...!!
மாநகர பேருந்தின் கூரை மீது பயணம் செய்ததுடன், தட்டிக் கேட்ட போக்குவரத்துக் கழக ஊழியர்களை தாக்கிய வழக்கில், கருணை இல்லத்தில் சேவை செய்ய வேண்டும் என்ற நிபந்தனையுடன், கல்லூரி மாணவர்களுக்கு முன் ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை பிராட்வேயில் இருந்து அஸ்தினாபுரம் நோக்கி சென்ற மாநகர பேருந்தில் அரசு நந்தனம் கலைக் கல்லூரி மாணவர்க்ள் சிலர், கூரை மீது ஏறி பயணித்துள்ளனர். அதை தட்டிக் கேட்ட சைதாப்பேட்டை பணிமனை ஊழியர்களை தாக்கியுள்ளனர். இது சம்பந்தமாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், முன் ஜாமீன் கோரி மாணவர்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள், நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன் விசாரணைக்கு வந்தன.
அப்போது மாணவர்களுடன், அவர்களின் பெற்றோரும் ஆஜராகியிருந்தனர். மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு முன் ஜாமீன் வழங்க வேண்டும் எனவும், இனிமேல் இதுபோன்ற செயல்களில் ஈடுபட மாட்டார்கள் எனவும் பெற்றோர் தரப்பில் உறுதி தெரிவிக்கப்பட்டது. இனி இதுபோன்ற செயல்களில் ஈடுபட மாட்டோம் என மாணவர்களும் உத்தரவாதம் அளித்தனர்.
இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி ஜெகதீஷ் சந்திரா, பெற்றோரின் வலியை புரிந்து கொள்ளும் வகையில், மாணவர்கள் அனைவரும் வேலை நாட்களில் தினமும் மாலை 3 மணி முதல் 6 மணி வரையும், சனிக்கிழமைகளில் காலை 10 மணி முதல் பகல் 12:30 மணி வரையும் சைதாப்பேட்டையில் உள்ள கருணை இல்லத்தில் சேவை செய்ய வேண்டும் எனவும், அதற்கான சான்றிதழுடன், அனுபவத்தை எழுதி தாக்கல் செய்ய வேண்டும் எனவும் நிபந்தனை விதித்து, முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.