அரசுப்பள்ளியில், கட்டாய நிதி வசூலித்த தலைமை ஆசிரியர் தற்காலிக பணி நீக்கம்!
ஓசூர் அரசு பள்ளி மாணவர்களிடம் கட்டாய நிதி வசூலில் ஈடுபட்ட அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே முல்லை நகரில், அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகின்றது. அடிக பள்ளியின் தலைமை ஆசிரியராக அலேக்ஸாண்டர் என்பவர் பணியாற்றி வருகிறார்.
தலைமை ஆசிரியர் அலேக்ஸாண்டர், கடந்த மூன்று ஆண்டுகளாக அரசு பள்ளி மேம்பாட்டு பணி மற்றும் வளர்ச்சிப் பணிகள் என்றும் தற்காலிக ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும் என்றும் பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோரிடம் கடந்த 3 ஆண்டுகளாக கட்டாய நிதி வசூல் செய்து வந்துள்ளார். அவ்வாறு, நிதி என்ற பெயரில் ரூ 5 லட்சத்திற்கும் மேல் திரட்டியுள்ளார்.
இந்த மோசடி குறித்து புகார் தெரிவிக்கப்பட்ட நிலையில், ஏற்கனவே மாவட்ட ஆட்சியர், தலைமை ஆசிரியருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். ஆனால் மாவட்ட ஆட்சியர் விடுத்த எச்சரிக்கையை காற்றில் விட்ட தலைமை ஆசிரியர், கட்டாய நிதி வசூலிப்பதை நிறுத்த வில்லை.
அதைத் தொடர்ந்து முதன்மை கல்வி அலுவலர் எச்சரிக்கையும் சுற்றறிக்கையும் அனுப்பிய நிலையில் தொடர்ந்து கட்டாய நிதி வசூலில் ஈடுபட்டு வருவதாக புகார் வந்த வண்ணம் இருந்துள்ளது. அதன் அடிப்படையில் இன்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி கட்டாய நிதி வசூலில் ஈடுபட்ட அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் அலேக்ஸாண்டரை தற்காலிக பணிநீக்கம் செய்து நடவடிக்கை எடுத்துள்ளார்.
இதையும் படிக்க: டாஸ்மாக் கடையின் பூட்டை உடைக்க முடியாததால், சிசிடிவி கேமராக்களை திருடிய திருடர்கள்!