கத்தியை காட்டி வழிப்பறி செய்த கும்பல்: 5 பேரில் ஒருவருக்கு மாவுக்கட்டு!

கத்தியை காட்டி வழிப்பறி செய்த கும்பல்: 5 பேரில் ஒருவருக்கு மாவுக்கட்டு!

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே குடியிருப்பு பகுதியில் கத்தியை காட்டி வழிப்பறி செய்து வந்த இளைஞர்களை கைது செய்துள்ளது காவல் துறை.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த நாவலூர் குடியிருப்பு பகுதியில், சிலர், கத்தியை காட்டி வழிப்பறி செய்து வருவதாகவும், அப்பகுதி மக்களிடம் போதையில் தொடர்ந்து பிரச்சினை செய்து வருவதாகவும், புகார் எழுந்துள்ளது. 

நாவலூர் பகுதியில் குடியிருக்கும் மக்கள் புகார் அளித்திருந்த நிலையில், அந்த சம்பவங்களில் ஈடுபட்டு வந்த 5 பேர், வாக்கு (எ) வினோத்(22), பார்த்திபன்(22), சுரேஷ்(21), பிரேம்(19), குகன் (19) ஆகியோரை,  தாம்பரம் காவல் ஆணையர் திரு அமல்ராஜ் ஐபிஎஸ் உத்தரவின் பேரில் மணிமங்கலம் சரக உதவி ஆணையர் ரவி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு ஐந்து பேரையும் கைது செய்து விசாரித்தனர். மேலும் தற்போது கைது செய்யப்பட்டுள்ள ஐந்து பேரும் ஏற்கனவே கடந்த 4ம் தேதி அதே பகுதியில் உள்ள சரவணன் என்பவரை கொலை முயற்சி செய்த வழக்கில் தலைமறைவாக இருந்தவர்கள் என்பதும், தெரியவந்துள்ளது.  

ஐந்து பேரில் முக்கிய குற்றவாளியான வாக்கு(எ) வினோத்தின் வலது காலுக்கு மாவு கட்டு போட்டுள்ளது காவல்துறை. இவர் மீது கொலை மற்றும் வழிப்பறி என பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பதும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

விசாரணைக்குப் பின், நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.