திருப்பூர்: இரவில் உலா வரும் டவுசர் கொள்ளையர்கள்...!!

திருப்பூர்: இரவில் உலா வரும் டவுசர் கொள்ளையர்கள்...!!

பல்லடம் அருகே உடலில் எண்ணெய் தடவி டவுசருடன் இரவில் உலா வரும் முகமூடி திருடர்களால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள சின்னையா கார்டன் பகுதியில் இரவு நேரத்தில் மர்ம நபர்கள் வீடு வீடாக புகுந்து திருட முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பல்லடம் சின்னையா கார்டன் பகுதியை சேர்ந்த ஜாகிர் என்பவர் வீட்டில் நேற்று நள்ளிரவு அனைவரும் உறங்கிய பின்னர் கதவை தட்டும் சப்தமும் பின்னர் உடைக்கும் சப்தமும் கேட்டுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஜாகிர்  யார் என கேட்டு சப்தம் எழுப்பி உள்ளார். அதன் பின்னர் சப்தம் கேட்காத நிலையில் சந்தேகமடைந்த ஜாகீர் வீட்டில் பொருத்தி இருந்த சிசிடிவி காட்சிகளை பார்த்த போது உடல் முழுவதும் எண்ணெய் பூசியபடி டிராயர் மட்டும் அணிந்த முகமூடி கொள்ளையர்கள் மூன்று பேர் வீட்டில் யாரும் இல்லை என நினைத்து திருட முயற்சிப்பதும் சப்தம் கேட்டவுடன் அங்கிருந்து தப்பிச் சென்றதும் தெரிய வந்தது. இதனை தொடர்ந்து அக்கம்பக்கதினரிடம் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து அருகில் இருந்த வீடுகளிலும் பொருத்தி இருந்த சிசிடிவி காட்சிகளை பார்த்த போது அனைத்து வீடுகளிலும் ஆட்கள் உள்ளனரா? என பார்த்து திருட முயன்றது தெரியவந்தது. இது தொடர்பாக அப்பகுதியினர் பல்லடம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இதே நபர்கள் டி.எம்.எஸ் நகர், திருவள்ளுவர் நகர் என அடுத்தடுத்த பகுதிகளிலும் திருட முயன்று சுற்றித்திரிந்ததும் தெரியவந்தது. இரவு நேரங்களில் உலா வரும் எண்ணெய் பூசிய டவுசர் முகமூடி கொள்ளையர்களால் பல்லடம் பகுதியில் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

இதையும் படிக்க:'ஒற்றை பதவி'க்கு அடித்துக்கொள்ளும் மதிமுக நிர்வாகிகள்!