51 லட்சம் வாடகை நிலுவை.... வழக்கு தொடர்ந்த மதுரை ஆதினம்!!

51 லட்சம் வாடகை நிலுவை.... வழக்கு தொடர்ந்த மதுரை ஆதினம்!!

மதுரை ஆதீன மடத்தில் உள்ள தனியார் விடுதியை காலி செய்ய  இந்து அறநிலையத்துறை ஆணையர் அனுப்பிய நோட்டிஸ்க்கு  தடை விதிக்க கோரி வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

வெளியேற உத்தரவு:

மதுரை  தெற்கு மாசி வீதியில் உள்ள மதுரை ஆதீன மடத்தின் உள்ளே  பாண்டிச்சேரியைச் சேர்ந்த சண்முகம், இளவரசன் குத்தகை பெற்று விடுதி நடத்தி வருகிறார்.  இந்த விடுதிக்கு கடந்த 2010 முதல் ஆதீனத்திற்கு குறைந்தபட்ச வாடகை செலுத்தாமலும், மின்சார கட்டணத்தை  செலுத்தாமலும் இருந்ததால், இந்து சமய அறநிலையத்துறையின் இணை ஆணையர் அவரை அங்கிருந்து வெளியேற்ற உத்தரவிட்டிருந்தார். 

விசாரணை:

இதனை எதிர்த்து அறநிலையத்துறை உத்தரவிற்கு தடை விதிக்க கோரி சண்முகத்தின் மகன் இளவரசன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுவினை தாக்கல் செய்திருந்தார்.  இந்த வழக்கு  நீதிபதி தண்டபாணி முன் விசாரணைக்கு வந்தது.

மனுதாரர்:

"மதுரை ஆதீன மடத்திற்கு சொந்தமான இடத்தை கடந்த 2010 ஆம் ஆண்டு மனுதாரர் குத்தகைக்கு பெற்று வணிக ரீதியிலான லாட்ஜ் நடத்தி வந்துள்ளார்.  இந்நிலையில் தற்போதைய ஆதினம், மனுதாரர் தங்களுக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து இருப்பதாக கூறி ஆக்கிரமிப்பு அகற்ற நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.  இதனை இரத்து செய்யவேண்டும்” என மனுதாரர் தரப்பில் கூறபட்டது.

ஆதீனம்:

மதுரை ஆதீனம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அருண் சுவாமிநாதன், "முந்தைய ஆதீனம் இந்து சமய அறநிலையத் துறையின் விதிகளுக்கு முரணாக மனுதாரருக்கு குத்தகை வழங்கியுள்ளார்.  இந்து சமய அறநிலையத் துறையின் விதிகளின் படி 5 ஆண்டுகள் மட்டுமே குத்தகைக்கு வழங்க முடியும்.  மனுதாரர் தற்போது வரை  51 லட்சத்து 93 ஆயிரத்து 798 ரூபாயை வாடகை செலுத்த வேண்டும்.  ஆனால் வாடகை தொகை செலுத்தாமல் நிலுவையில் உள்ளது.  அறநிலை துறையின் உத்தரவையும் மனுதாரர் மதிக்கவில்லை" என தெரிவிக்கப்பட்டது.

தீர்ப்பு:

இதனை பதிவு செய்த நீதிபதி  இந்த வழக்கில் வாடகை செலுத்த முகாந்திரம் இருப்பதாக கருதி, மனுதாரர் தரப்பில்  2 வாரத்தில் 25 லட்ச ரூபாயை டெபாசிட் செய்ய வேண்டும் என்ற நிபந்தனையுடன்,  மனுதாரருக்கு அனுப்பப்பட்ட நோட்டீஸிற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.  ஒருவேளை மனுதாரர் 25 லட்ச ரூபாயை டெபாசிட் செய்ய தவறினால் இந்து சமய அறநிலையத்துறையின் மதுரை உதவி ஆணையர் மனுதாரரை ஆதீனத்தின் சொத்தில் இருந்து வெளியேற்ற உரிய நடவடிக்கை எடுக்கலாம் என உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.

இதையும் படிக்க:  ரயிலில் கால் சிக்கி கொண்ட மதுரை ராணுவ வீரர்... அவசர சிகிச்சையில் அனுமதி!!